ராகுல் வந்தால் மட்டும் காங்கிரஸ் நிமிர்ந்து விடுமா?

Subscribe to Oneindia Tamil

காலகேயர்களை வென்றால் முடி சூட்டுவேன் என்ற சிவகாமிதேவியின் ஆணையை நிறைவேற்றி அரசனாகும் வாய்ப்பை பெறுவார் பாகுபலி. சினிமாவில்தான் இது சாத்தியம் போல... நிஜ வாழ்வில் எதையுமே சாதிக்காமல் முடி சூட்டிக்கொள்ளப் போகிறார் ராகுல் காந்தி. ஆமாம்... தடுப்பதற்கு யாரும் இல்லை. அப்படியே யார் தடுத்தாலும் கூட ராகுல் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவராக அடுத்த வாரம் முடிசூட்டிக்கொள்ள இருக்கிறார். அடுத்த வாரம் என்பது அக்டோபர் வரை வேண்டுமானால் தள்ளிப்போகலாம். அக்டோபரில் தான் அதிசயமாக உள்கட்சித் தேர்தலை நடத்தத் திட்டமிட்டிருக்கிறதாம் காங்கிரஸ்.

நாட்டையே உலுக்கிய பண மதிப்பு நீக்க நடவடிக்கை முதல் மாட்டுக்கறி பிரச்னை வரை எல்லாவற்றிலும் வெறும் அறிக்கைகளோடு வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். ஒரு குடும்பத்தின் பிடியில் ஒட்டுமொத்த கட்சியுமே இருந்தால் இதுதான் விளைவாக இருக்கும்.

காங்கிரஸின் வீழ்ச்சி
1951 364
1957 371
1962 361
1967 283
1971 352
1977 153
1980 351
1984 415
1989 197
1991 244
1996 140
1998 141
1999 114
2004 145
2009 206
2014 44

"ஒரு நல்ல நோக்கத்துக்காக காங்கிரஸ் இயக்கத்தை தொடங்கினோம். அது வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டது. இனி காங்கிரஸ் இயக்கம் தேவையில்லை. அதனை கலைப்பது தான் நல்லது'' - 1947 ல் நாடு விடுதலை பெற்ற உடனே காந்தி சொன்னது. காந்தி 70 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னதை இப்போது ராகுல் காந்தியும், சோனியாவும்தான் நிகழ்த்தி காட்டுவார்கள் போல.

1984ல் நானூற்று பதினைந்து இடங்கள் வென்ற காங்கிரஸ் அடுத்த முப்பது ஆண்டுகளில் நாற்பத்து நான்கு இடங்களுடன் முடங்கி போயிருக்கிறது. பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த கட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாமல் போனதற்கு காரணம் இந்தியாவிற்கு தங்களை விட்டால் வேறு வழியில்லை என்ற ஏகோபித்த மனப்பான்மையால் விளைந்த அலட்சியம் தான். நெருக்கடிக்கு நிலைக்கு பிறகு கூட தோற்றாலும் 150 இடங்களை வென்ற காங்கிரஸால் இப்போது அதில் மூன்று ஒரு பங்கு கூட வெல்ல முடியவில்லை.

எல்லாமே நியமனம்தான்

எல்லாமே நியமனம்தான்

இந்தியாவின் மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ் உள்கட்சி ஜனநாயகம் என்பதை மறந்தே பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தேசிய தலைவர் முதல் வட்ட செயலாளர் வரை எல்லாமே நியமனம்தான். அப்படி நியமிக்கப்படுபவர்கள் கூட எந்தெந்த தகுதிகளால் நியமிக்கப்பட்டார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. இதனால் உண்மையான தொண்டர்கள் சோர்ந்து போனார்கள். இப்போது கூட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளாக இருக்கும் பாதி பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்து வந்தவர்கள் கிடையாது. மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களோ, சோதனை காலத்தில் கட்சி மாறி போய் விட்டு பதவி சுகம் அனுபவிக்க வந்தவர்களாகவோ தான் இருப்பார்கள்.அதனால் தான் கட்சி தோற்க போகிறது என்று தெரிந்ததும் சம்பாதித்த காசை காப்பாற்ற தேர்தலில் போட்டி கூட போடாமல் ஒதுங்கினார்கள் பலர்.

ஆட்சி தான் முக்கியம்

ஆட்சி தான் முக்கியம்

மாநிலங்களை விட்டு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக விலகி செல்ல ஆரம்பித்தபோதே அதன் வீழ்ச்சி துவங்கிவிட்டது. மக்களை பற்றியெல்லாம் கவலையில்லை எங்களுக்கு ஆட்சி தான் முக்கியம். அதனை தக்க வைக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று கூட்டணி கட்சிகளுக்கு ஒரேயடியாக வளைந்துகொடுக்க துவங்கியது கட்சி. பலவீனமாக இருந்த மாநிலங்களில் கட்சியை கண்டுகொள்ளாமல் விட அந்த மாநிலங்களின் எண்ணிக்கை ஒவ்வொன்றாக அதிகரித்தது.

பப்புவின் வேகாத பருப்பு

பப்புவின் வேகாத பருப்பு

காங்கிரஸுக்குள் ராகுல் காலடி எடுத்து வைத்தபின்னரே கட்சிக்கு சோதனை தொடங்கிற்று என்று சொல்கிறார்கள். மாநிலத்தலைவர்களையோ, நிர்வாகிகளையோ சந்தித்து ஆலோசனை கேட்காதது, கட்சியின் மூத்த தலைவர்களை மதிக்காமல் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுத்தது, உருப்படியான யோசனைகளை விடுத்து ஸ்டண்ட் அடித்து விளம்பரம் தேடியது, சிறிது கூட பக்குவமே இல்லாமல் பேசி மாட்டியது என ராகுலின் சிறுபிள்ளைதன நடவடிக்கைகள் ஏராளம். நாடு முழுவதும் ஏற்கெனவே இருக்கும் கோஷ்டிகளை ஒழித்து கட்சியை பலப்படுத்துவார் என எதிர்பார்த்தால் ராகுல் தன் பங்குக்கு தனி கோஷ்டிகளை உருவாக்கத் தான் முயன்றார். அப்படி உருவாக்கப்பட்டு ராகுல் காந்தியின் ஆசியையும், பணபலத்தையும் பெற்றும் கூட அவர்களில் பெரும்பாலானோர் டெபாசிட் கூட வாங்காமல் மண்ணை கவ்வினார்கள். ஏன் ராகுலே தனது தொகுதியில் போராடித்தான் வெல்ல முடிந்தது.

காசு பணம் துட்டு மணி

காசு பணம் துட்டு மணி

ஊழலை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியதே காங்கிரஸ் கட்சி தான் என்றாலும் கடந்த பத்தாண்டுகளில் காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் செய்த ஊழல்கள் பகிரங்கமாகவே வெளியாகின. காங்கிரஸ் அரசின் முந்தைய பதவிக் காலத்தில் நடந்த மாபெரும் ஊழல்கள் கடந்த ஐந்தாண்டுகளில்தான் வெளிச்சத்துக்கு வந்தன. 2ஜி ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, எஸ் - பேண்டு ஆகிய ஊழல்களில் அடிபட்ட தொகை தலா 2 லட்சம் கோடியை தொட உலகமே காங்கிரஸை பார்த்து கிறுகிறுத்தது. ஊழலை விட ஊழலை மூடி மறைக்க காங்கிரஸ் எடுத்த முயற்சிகள் ஒவ்வொன்றும் மண்டையை மறைச்சே கொண்டையை மறைக்கலையே என்னும் லெவலிலேயே அதற்கே ஆப்புகளாக முடிந்து போனது.

இவையெல்லாவற்றையும் விட காங்கிரஸ் கட்சி என்பதே ஒரு குடும்ப கம்பெனியாக மாறிப்போனதே எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணம்... காங்கிரஸை அந்த குடும்பத்தின் பிடியில் இருந்து யார் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்த்திருக்க, மீண்டும் அந்த குடும்பத்தை சேர்ந்த செயல்படாத ராகுலிடமே கட்சியை ஒப்படைக்கப் போகிறார்கள். இப்போது நாட்டிற்கு வலுவான ஓர் எதிர்க்கட்சியும் எதிர்க்கட்சித் தலைவரும் தேவை. ஆனால் அது கிடைக்காது என்பது உறுதியாகி விட்டது.

- க.ராஜிவ் காந்தி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+