ராஜிவ் வழக்கில் 7 தமிழர் விடுதலை தொடர்பான வழக்கு விசாரணை - 21-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
டெல்லி: ராஜீவ்காந்தி வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிப்பதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கை 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப் பட்டது. பின்னர், அவர்களின் கருணை மனு மீதான தாமதத்தை காரணம் காட்டி கடந்த ஆண்டு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, தண்டனை அனுபவித்த காலத்தை கருத்தில்கொண்டு அவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது.

ஆனால், இதனை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ராஜீவ் கொலை வழக்கை சிபிஐ விசாரித்ததால், குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க மத்திய அரசு மட்டுமே அதிகாரம் உண்டு எனவும் நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது. இதனால், அவர்கள் ஏழு பேரை விடுதலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மனுக்கள், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் இப்ராஹிம் கலிஃபுல்லா, பினாகி சந்திர கோஸ், அபய் மனோகர் சப்ரே, உதய் உமேஷ் லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது.
அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் அன்றைய தினம் தூக்கு தண்டனைக்கு எதிரான அனைத்து வழக்குகள் மீதும் விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அதோடு, ராஜிவ் வழக்கில் 7 தமிழர் விடுதலைக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications