புது 500, 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து முடிக்க 7 மாதமாகுமாம்.... போட்டுடைக்கும் ப. சிதம்பரம்
புதிய 500, 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து முடிக்க இன்னும் 7 மாதமாகும் என்கிறார் ப.சிதம்பரம்
டெல்லி: புதிய 500, 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து முடிக்க மொத்தம் 7 மாத காலமாகும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிவி ஒன்றுக்கு சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
செல்லாத ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் மத்திய அரசு மிகப் பெரிய தவறைச் செய்துவிட்டது. தற்போது மத்திய அரசு மொத்தம் 2100 கோடி ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்துள்ளது.
ஆனால் இந்தியாவில் மொத்தமே ஒரு மாதத்துக்கு 300 கோடி ரூபாய் நோட்டுகளை மட்டுமே அச்சடிக்க முடியும். அதே நேரத்தில் செல்லாத ரூபாய் நோட்டுகள் என அறிவிக்கப்பட்டிருப்பவை இதைப் போல 7 மடங்கு அதிகமானவை.
ஆகையால் புதிய 500, 1000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து முடிக்க இன்னும் 7 மாதங்கள் எடுக்கும் என்பதுதான் யதார்த்தம்.
தற்போது புதிய ரூ2,000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. இந்த ரூ2,000 மூலமாக நிலைமை முழுமையாக சீரடைய இன்னும் 5 அல்லது 6 மாதங்களாகும்.
சரி ரூ500, ரூ1,000 செல்லாது என அறிவித்தீர்களே? எதற்காக ரூ2,000 நோட்டுகளை அறிமுகம் செய்தீர்கள்? என்ற என் கேள்விக்கு எந்த ஒரு பதிலுமே இதுவரை கிடைக்கவில்லை.
இவ்வாறு சிதம்பரம் கூறினார்.