காவிரி மேலாண்மை வாரியம்.. தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உடனடியாக பலன் தருமா?
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது தமிழக அரசு.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் 6 வார காலம் கெடு விதித்த நிலையில், இதுவரை, அதை செய்யவில்லை. இதையடுத்து தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதை அவசர வழக்காக வரும் திங்கட்கிழமை அன்று விசாரணை நடத்த வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவில், மத்திய அமைச்சரவை செயலாளர் பி.கே சின்கா மற்றும் நீர்வளத்துறை செயலாளர் யு.பி சிங் ஆகியோர், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி 6 வார காலத்திற்குள், நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்த செயல்பாட்டு திட்டத்தை அமல்படுத்த வில்லை என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பொதுப்பணித் துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டாலும், மத்திய அரசு அதிகாரிகளிடம், சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, அவர்கள் அதற்கு பதிலளித்த பிறகு, பரிசீலனை செய்துதான் உத்தரவை பிறப்பிக்கும்.
இதனிடையே, மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில், அதன் உத்தரவுக்கு விளக்கம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை காரணம் காண்பித்து, மத்திய அரசால், தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமதம் செய்ய வாய்ப்புள்ளது.
எப்படி பார்த்தாலும், மத்திய அரசு விரும்பும்படி, வழக்கில் ஒரு முடிவு தெரிய குறைந்தபட்சம், 3 மாதகாலமாவது ஆகிவிடும். அதற்குள் கர்நாடக தேர்தலும் முடிந்துவிடும்.












Click it and Unblock the Notifications