சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பில் உள்ளதா சசிகலா அரசியல் எதிர்காலம்! சட்ட நிபுணர்கள் சொல்வது என்ன?
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு சசிகலா நடராஜனின் அரசியல் எதிர்காலத்திற்கு முட்டுக் கட்டை போடுமோ என்ற பேச்சு சட்ட வல்லுநர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் சசிகலா. இளவரசி, சுதாகரன் ஆகியோரும் அப்பட்டியலில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதாவை ஊழல் செய்ய தூண்டியது சசிகலா என்பது குற்றச்சாட்டு. பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு படி ஜெயலலிதா உள்பட நால்வருமே குற்றவாளிகளாகும். ஆனால் ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு படி நால்வரும் நிரபராதிகளாகினர்.

சின்னம்மா
வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. கர்நாடக தரப்பில் வாதிடும்போது கூட, சசிகலாவை அதிமுக வட்டாரத்தில் சின்னம்மா என்றுதான் அழைக்கிறார்கள். அவர் கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரம்மிக்க சக்தியாக உள்ளார் என்ற வாதம் முன் வைக்கப்பட்டிருந்தது.

தீர்ப்பு ஒத்தி வைப்பு
சுப்ரீம்கோர்ட்டில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தீர்ப்பு பாதகமாக வந்தால் சசிகலா அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஊழல் தடுப்பு
ஊழல் தடுப்பு சட்டப் பிரிவின் கீழும் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்த காலத்தில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு என்பதால், அரசு பதவியில் இருப்பவர்கள் ஊழல் செய்தால் பயன்படுத்தப்படும் இந்த சட்ட பிரிவு பயன்படுத்தப்பட்டது.

சசிகலாவுக்கு பொருந்துமா?
இதே சட்டப்பிரிவின்கீழ் சசிகலாவை தண்டிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அவர் அரசாங்க பதவியில் இல்லாதவர். இதுகுறித்து 'ஒன்இந்தியா' சட்ட வல்லுநர்கள் சிலரின் கருத்துக்களை கேட்டது. அவர்கள் கூறுகையில், ஐ.பி.சி சட்டப்பிரிவின்படி, சசிகலா சதி செயலில் ஈடுபட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சசிகலா உள்ளிட்டோர் மீது பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இந்த சட்டப் பிரிவுகளின்கீழும்தான் தண்டனை வழங்கியது என்று அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

சந்தோஷ் ஹெக்டே
சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறுகையில், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் அரசு பதவியில் இல்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால், ஜெயலலிதா அரசு பதவியில் இருந்தவர், அவருக்கு சசிகலா தூண்டுதலாக இருந்து ஊழல் செய்தார் என்ற அடிப்படையில் சசிகலா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் தண்டனை விதிக்க முடியும்.

ஜெயலலிதா இறந்தாலும் விடாது வழக்கு
ஜெயலலிதா உயிரோடு இல்லாத இந்த சூழலில், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற கேள்வியும் பலருக்கு எழுகிறது. ஆனால், ஜெயலலிதா இறந்தால் கூட அவர் மீதான குற்றச்சாட்டு உயிர்ப்போடுதான் உள்ளது. எனவே ஊழல் தடுப்பு சட்டப் பிரிவின்கீழ் பதியப்பட்ட வழக்கு மாறாது. ஒருவேளை பெங்களூர் நீதிமன்ற, நீதிபதி குன்ஹா தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தால், ஜெயலலிதாவுக்கு தண்டனை தர முடியாதே தவிர மற்றவர்களுக்கு தண்டனை தர முடியும். வழக்கு இறுதி கட்டத்தில் இருக்கும்போது, சட்டப் பிரிவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications