10 நாட்கள் ரோட்டிலிருந்தபடியே 'ஃபைல்' பார்ப்பேன்.. கெஜ்ரிவால்
டெல்லி: 10 நாள் போராட்டத்தை அறிவித்துள்ள கெஜ்ரிவால், தான் தடுத்து நிறுத்தப்பட்ட இடத்திலிருந்தபடியே 10 நாட்களும் பணியாற்றப் போவதாக கூறியுள்ளார். மேலும் தான் இருக்கும் இடத்திற்கே கோப்புகள் வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒரு மாநில அரசாங்கம், மத்திய அரசாங்கத்தை மிரட்டும் வகையில் செயல்படுவதும், அரசாங்க நிர்வாகத்தை நடு ரோட்டுக்குக் கொண்டு வந்து நடத்துவதும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கெஜ்ரிவால் செய்வது சரியா என்ற கேள்விகளும் எழத் தொடங்கியுள்ளன. மத்திய அரசை இப்படித்தான் மிரட்டுவதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இதற்கிடையே, தனது போராட்டத்தில் சற்றும் பின்வாங்காத கெஜ்ரிவால், தான் இருக்கும் இடத்திலிருந்தே கோப்புகளைப் பார்க்க ஆரம்பித்துள்ளார். இந்தப் போராட்டத்தால் தனது பணிகள் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
லோடு லோடாக கோப்புகள் வந்து கெஜ்ரிவால் இருக்கும் இடத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.
கெஜ்ரிவாலும், அவரது ஆறு அமைச்சர்களும் அதே இடத்தில் இருந்தபடியே கோப்புகளைப் பார்த்து பணியில் ஈடுபட்டுக் கொண்டே போராட்டத்தையும் தொடருகின்றனர். உள்துறை அமைச்சகத்திற்கு சற்று தொலைவில் சாலையோரமாக உட்கார்ந்து கோப்புகளைப் பார்த்து வருகிறார் கெஜ்ரிவால்.