எனக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு கொடுத்திருக்கலாமே..சொல்வது "டிஸ்மிஸ்" சசி தரூர்
டெல்லி: புகார்களுக்கு விளக்கம் அளிக்க தமக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசி தரூர் கூறியுள்ளார்.
மோடி சிறப்பான முறையில் ஆட்சி நடத்தி வருவதாகவும், தூய்மை இந்தியா திட்டத்தில் தன்னை இணையுமாறு கூறிய மோடியின் அழைப்பை ஏற்பதாகவும் கூறிய சசி தரூரை காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து அக்கட்சி நீக்கியுள்ளது.
கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மோடியை பாராட்டிய தரூர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கட்சி தலைமைக்கு கடிதம் எழுதினர். இதனையடுத்து அக்கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை குழுவை இப்புகார் தொடர்பாக விசாரிக்குமாறு கூறியது.
இந்த விசாரணையின் முடிவில் சசி தரூர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைத்தது. இதனையடுத்தே அவர் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தரூர், புகார் தொடர்பாக விளக்கமளிக்க தனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.. நாட்டுக்கும், தொகுதி மக்களுக்கும் சேவை செய்யவே அரசியலுக்கு வந்தேன். என்னை கட்சி நடத்திய விதம் முடிவுக்கு வந்துவிட்டது. இனி அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.
இதனிடையே தரூர் மீது கட்சித்தலைமை எடுத்துள்ள முடிவை வரவேற்பதாக கேரள காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.