செகந்திராபாத்தில் 60 வயது முதியவரோடு சேர்த்து வீட்டை இடித்த அதிகாரிகள்
செகந்திராபாத்: தெலுங்கானாவில் 60 வயது நபர் வீட்டில் இருக்கையில் அவரை வெளியேற்றாமல் கட்டிடத்தை அதிகாரிகள் இடித்ததில் அவர் படுகாயம் அடைந்தார்.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள அல்வால் பகுதியில் உள்ள வீடு ஒன்றை இடித்து தள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்த நோட்டீஸ் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் இன்று அந்த வீட்டிற்கு சென்றனர். அவர்கள் முன்னிலையில் அந்த வீட்டை பணியாளர்கள் இடித்தனர். இடித்த பிறகு தான் வீட்டில் 60 வயதான ஸ்ரீனிவாஸ் இருந்தது தெரிய வந்தது.
இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த அவர் பின்னர் மீட்கப்பட்டார். வீட்டில் ஆள் இருப்பது கூட தெரியாமல் கட்டிடத்தை இடித்த அதிகாரிகளை கண்டித்து மக்கள் போலீசில் புகார் அளித்தனர். காயம் அடைந்துள்ள ஸ்ரீனிவாஸ் குணமான பிறகு தான வழக்குப்பதிவு செய்ய முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.