ஒபாமா முன்னிலையில், இந்தியாவின் ராணுவ பலம், கலாசாரத்தை காண்பித்த குடியரசு தின பேரணி!
டெல்லி: பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் கண் கவரும் வகையில் குடியரசு தின ஊர்வலத்தில் இடம் பெற்றன. அதுகுறித்த விவரத்தை இந்திய பிரதமர் நரேந்திரமோடி, அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எடுத்துரைத்தார்.
இந்திய குடியரசு தின ஊர்வலம் மிகவும் பிரசித்தி பெற்றது. நாட்டின் ராணுவ பலத்தை பறைசாற்றும் ஊர்வலங்களும், பல்வேறு மாநிலங்களின் சிறப்பம்சங்களை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகள் ஊர்வலமும் பங்கேற்பது வழக்கம்.
இவ்வாண்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றதால், வழக்கத்தைவிட பிரமாண்டமாக ஊர்வலங்கள் இடம் பெற்றன. முப்படைகள் அணிவகுப்பு, லகு ரக ஹெலிகாப்டர் இயக்கம், ராக்கெட் லாஞ்சர்கள், ரேடார்கள் ஊர்வலம் என ராணுவ பலத்தை பறைசாற்றியது ஊர்வலம்.
மேலும், குடியரசு தின வரலாற்றில் முதல்முறையாக பெண்கள் சக்தியை எடுத்துக்காட்டும் வகையில் மகளிர் ராணுவ பிரிவினரின் அணிவகுப்பும் நடைபெற்றது. அதேபோல மேக் இன் இந்தியா, இந்திய ரயில்வே, மங்கள்யான் வெற்றி போன்றவற்றை எடுத்துக் காட்டும் ஊர்திகளின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் காணிப்கக்பப்டடன.
இதைத் தொடர்ந்து பல மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. கர்நாடகாவில் சென்னபட்ணா நகரில் தயாராகும் பொம்மைகள் மிகவும் பிரபலம் என்பதால் அதை முன்வைத்து அலங்கார ஊர்தி சென்றது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா பிரிக்கப்பட்ட பிறகு இது முதல் குடியரசு தினம் என்பதால் இறு மாநிலங்களுமே தனித்தனி ஊர்திகளை காட்சிப்படுத்தின.
தமிழக ஊர்தி வராதது தமிழர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. ஒபாமா முன்னிலையில் தமிழக ஊர்தியை காண்பித்து, தமிழகத்தின் முக்கிய திட்டங்களை காட்சிப்படுத்தியிருந்தால், எதிர்காலத்தில் ஏதாவது ஒருவகையில் முதலீட்டை ஈர்க்க அது வகை செய்திருக்கும். ஆனால், தமிழக அலங்கார ஊர்தி இந்த வருடம் இடம்பெறவில்லை.