டெல்லியில் ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு இயக்கத்தினர் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதம் வாபஸ் !
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி டெல்லி ஜந்தர்மந்தரில் நடைபெற்று வந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
டெல்லி: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி டெல்லியில் ஜல்லிக்கட்டு உரிமை மீட்புக் கழகம், டெல்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி மாணவர்கள் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தைத் தொடர்ந்து வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது நடத்தப்படுகிறது ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் விதித்த தடையால், கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வந்தது.
இதில், டெல்லி பல்கலைக்கழகம், ஜல்லிக்கட்டு உரிமை மீட்புக் கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி மாணவர்கள் டெல்லி கலந்துகொண்டுள்ளனர். டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்தப் போராட்டம் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் தொடர்ந்தது.
இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று போராட்டக்காரர்களை சந்தித்தார். அப்போது இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து நான்கு நாட்களாக நடைபெற்று வந்த உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக ஜல்லிக்கட்டு மீட்பு குழுவினர் அறிவித்துள்ளனர்.