ஒன்லி கேஸ் பேமெண்ட்.. ஆன்லைனில் வாங்க மாட்டோம்... மறுத்த மருத்துவமனை.. வாசலில் பறிபோன உயிர்!
விசாகப்பட்டினம்: வங்கி கணக்கில் பணம் இருந்த நிலையில், அதை ஆன்லைன் மூலம் பெற மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. நேரடியாகதான் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறி கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணை சிகிச்சைக்கு அனுமதிக்க மறுத்துவிட்டது. இதனால் மருத்துவமனைக்கு வெளியே 3 மணி நேரம் காத்திருந்த பின் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் போதிய படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் வசதிகள், ரெம்டெசிவர் மருந்துகள் கிடைக்காமல் பல இடங்களில் மக்கள் அல்லாடுகிறார்கள்.
ஆந்திராவில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு, ரொக்கமாக பணத்தை செலுத்தினால் தான் சிகிச்சை என்று மருத்துவமனை கூறியதால் அந்த பெண் உயிரிழந்தார் இச்சம்பவம் ஸ்ரீகாகுளம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரொக்கமாக செலுத்த வேண்டும்
ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி. கொரோனாத்தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அங்குள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள். அஞ்சலியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க ஒப்புக்கொண்ட நிர்வாகம் முதலில் பணம் செலுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.

ஏடிஎம் கார்டை ஏற்க மறுப்பு
வங்கிக்கணக்கில் பணம் இருந்த நிலையில், அஞ்சலியின் உறவினர்கள் ஆன்லைன் அல்லது ஏ.டி.எம் கார்டு மூலம் பணத்தை செலுத்துவதாக கூறியுள்ளார்கள்.. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அதனை ஏற்றுக்கொள்ளாமல் ரொக்கமாக மட்டுமே பணத்தை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது

இறந்து போன இளம் பெண்
அதனால் அஞ்சலியை மருத்துவமனைக்கு வெளியே உட்காரவைத்த அவருடன் வந்த இரண்டு பெண்களும் பணத்தை தேடி ஏடிஎம் மையங்களுக்கு சென்றுள்ளனர்.. கிட்டத்தட்ட மூன்று மணிநேரம், அலைந்து திரிந்து பணத்தைத்திரட்டி மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் வந்து பார்த்த போது அஞ்சலி இறந்துகிடந்தார். பெண்கள் என்பதால் அஞ்சலி உடலை அவர்களால் தூக்கவும் முடியவில்லை .

உயிரிழந்த பெண்
உடலை யாரும் அப்புறப்படுத்த முன்வராத நிலையில், அந்த வழியாக சென்று கொண்டிருந்த செய்தியாளர்கள் இரண்டு கொரோனா பாதுகாப்பு உடையணிந்து அஞ்சலியின் உடலை அவருடைய உறவினர்களுடன் சேர்ந்து இறுதி யாத்திரை வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள். டிஜிட்டல் பரிவர்த்தனை மருத்துவமனை நிர்வாகம் ஏற்காமல் போனதால் அநியாயமாக ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications