பஞ்சாபின் "நிர்பயா": மோகா கிராமத்தில் மேலும் ஒரு அட்டூழியம்.. 11 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்!
மோகா: பஞ்சாப்பில் பேருந்தில் வைத்து 14 வயது சிறுமியும், அவரது தாயும் பாலியல் பலாத்காரம் செய்து தூக்கி வீசப்பட்ட மோகா பகுதியிலேயே மற்றொரு இளம்பெண்ணும் 11 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை ஒரு 14 வயது சிறுமியும், அவரது தாயாரும் ஒரு தனியார் பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர், மற்றும் இன்னும் சிலரால் மானபங்கப்படுத்தப்பட்டு தூக்கி வெளியே வீசப்பட்ட சம்பவத்தில் அச்சிறுமி உயிரிழந்தார். அந்தப் பேருந்து, முதல்வர் பாதல் குடும்பத்தினருக்குச் சொந்தமான பேருந்து என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதே கிராமத்தில் மேலும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவரை 11 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமையன்று தன்னுடைய நண்பரைப் பார்க்கச் சென்ற அப்பெண்ணை அவரது தோழியின் கணவர் உட்பட 11 பேர் ஒரு இடத்திற்கு கடத்திச் சென்றுள்ளனர் அங்கு வைத்து அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். அப்பெண்ணுடன் இருந்த ஆண் நண்பரை அடித்து, உதைத்த அக்குற்றவாளிகள் பின்னர் இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.
மருத்துவ பரிசோதனையில் அப்பெண் பலாத்காரம் செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருடைய தோழி, கணவர் மற்றும் 10 பேர் மேல் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீசார்.
பஞ்சாபில் ஒரே பகுதியில் இரு பெண்கள் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.