காவல் நிலையத்திலேயே பீர் குடித்து விட்டு ரகளை செய்த இளம் பெண்... சமாளிக்க முடியாமல் திணறிய போலீசார்
மும்பை : தீவிரவாதிகள், ரவுடிகளையெல்லாம் களையெடுத்து சமாளித்து வரும் மும்பை போலீசார் காவல் நிலையத்திலேயே பீர் குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்ட இளம் பெண்ணை சமாளிக்க முடியாமல் திணறிப் போயினர்.
ஹோட்டல் ஒன்றின் முன்பு நள்ளிரவில் மதுபோதையில் 25 வயதுள்ள இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் நின்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கிருந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர் அதனை கேட்கவில்லை.

இதையடுத்து அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார், அறிவுரை கூறினர். இருப்பினும் அவர் தனது கையில் பீர் பாட்டிலை வைத்துக்கொண்டு குடித்துக்கொண்டே உளறியபடி இருந்தார்.
போதையில் இருந்த அவருக்கு என்ன சொன்னாலும் புரியாது என்பதால் அவரின் நடவடிக்கைகளை வீடியோ எடுத்து வைத்த போலீசார், காலையில் 1,200 ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர். மும்பை போலீஸ் சட்டத்தின் கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக மூத்த ஆய்வாளர் ராஜாராம் தெரிவித்தார்.
முன்னதாக அவர் போதையில் இருந்தபோது மாறி மாறி பேசியுள்ளார். தனது பெயர் சுனிதா யாதவ் என்றும், தான் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், தான் ஒரு அனாதை என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications