உ.பி.யில் கொடூரம்: பெண்ணைப் பலாத்காரம் செய்து மரத்தில் நிர்வாணமாக கட்டி வைத்த அயோக்கியர்கள்
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் வயலுக்கு வேலைக்குச் சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல், அவரை உயிருடன் நிர்வாணமாக மரத்தில் கட்டி வைத்து விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் கன்னூஜ் நாடாளுமன்ற தொகுதியில் உள்ளது செங்கபூர்வா கிராமம். இண்டர்கார் போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் வரும் இந்தக் கிராமத்தில், சம்பவத்தன்று 33 வயது பெண் ஒருவர் வயல் வேலைக்கு சென்றார். அப்போது அந்த கிராமத் தலைவரின் மகனான ஆசிரியர் சர்வேஷ் யாதவ் மற்றும் 2 பேர் சேர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர், அப்பெண்ணின் உடைகளை மரத்தின் உச்சிக்கு தூக்கி எறிந்த அந்தக் கும்பல், நிர்வாண நிலையில் அவரை அதே மரத்தில் கட்டி வைத்து விட்டு தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் ஊர் மக்களால் மீட்கப் பட்ட அப்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடத்திய விசாரணையில் கிராமத் தலைவரின் மகன் சர்வேஷ் மட்டுமே தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அளித்துள்ள புகாரில் சர்வேஷுடன் இணைந்து மேலும் இருவர் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். தற்போது சர்வேஷை கைது செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், மருத்துவ பரிசோதனைக்காக பாதிக்கப்பட்ட அப்பெண்ணை கான்பூருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர்.
கன்னூஜ் உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவின் சொந்த தொகுதி என்பது குறிப்பிட தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உத்திரப்பிரதேசத்தில் இரவில் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற சகோதரிகள் இருவர் மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரத்தில் தூக்கில் தொங்க விடப்பட்டனர்.
நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இச்சம்பவத்தைத் தொடர்ந்து உத்திரப்பிரதேசத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.