ஜம்மு காஷ்மீர் – வீடு இடிந்து விழுந்து தாய் மற்றும் மகன் உயிரிழப்பு
டோடா: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள டோடாவில் நேற்று மாலை திடீரென்று வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் தாயும், மகனும் உயிரிழந்தனர்.
ஜம்முவின் டோடா மாவட்டத்தில் நேற்று மாலை திடீரென வீடு ஒன்று இடிந்து தரைமட்டமானது. இதில், வீட்டிலிருந்த காந்தா தேவி மற்றும் அவரது இரண்டு வயது மகன் நாட்டிக் ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்த அவர்களது உடல்களை பொது மக்கள் உதவியுடன் மீட்புப் படை வீரர்கள் மீட்டனர். மேலும் ஐந்து வயது சிறுமி ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்கு டோடா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் நடைபெற்றப் பகுதியில் உள்ள பல வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் எச்சரித்திருந்தது. நேற்று முன்தினம் டோடா மாவட்டம் தப்னீல் நகரில் பூமி அதிர்வால் பள்ளிக்கூடம் ஒன்று இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.