திருடியதாக கைது செய்யப்பட்ட பெண்ணை முரட்டுத்தனமாக போட்டுத் தாக்கிய பெண் போலீஸ்
காஸியாபாத்: உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்ட பெண்ணை பெண் போலீஸ்காரர் ஒருவர் முரட்டுத்தனமாக தாக்கிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டம் ஒழுங்கு கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு மோசமான காவல் துறை நிர்வாகம் உள்ள மாநிலங்களில் முக்கியமானது உத்தரப் பிரதேசம். அங்கு போலீஸாரின் அத்துமீறல்கள் அதிகம் என்று ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில் காஸியாபாத் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் சிக்கிய பெண்ணை ஒரு பெண் போலீஸ்காரர் மிகவும் முரட்டுத்தனமாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனித உரிமைகளுக்கு முற்றிலும் புறம்பாக அந்தப் பெண்ணை அப்படிப் போட்டு அடிக்கிறார் அப்பெண் காவலர். பெல்ட்டைக் கழற்றி அந்தப் பெண் கதறக் கதற அடித்துத் தள்ளுகிறார் அந்தப் பெண் காவலர்.
லோன் மெயின் மார்க்கெட்டில் ஒரு பெண்ணிடம் தங்கச் சங்கிலியை திருடியதாக கைதானவர் இந்தப் பெண். அந்தசங்கிலியை இவரிடமிருந்து மீட்டு விட்ட போலீஸார் காவல் நிலையத்தில் வைத்து பெண் போலீஸ்காரரை விட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து அந்தப் பெண் போலீஸ்காரரை மாவட்ட எஸ்.பி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.