பிறந்து 15 நாட்களே ஆன பெண் சிசு– 20 ஆயிரம் ரூபாய்க்கு பேரம் பேசிய தாய் கைது!
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை 20 ஆயிரம் ரூபாய்க்கு பேரம் பேசி விற்க முயன்ற தாயை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பன்சிலால்பேட் பகுதியை சேர்ந்த வெங்கடலட்சுமி .
அப்பெண்மணி தனது பிறந்த குழந்தையை விற்பதற்காக மாதவி என்பவரிடம் புரோக்கர்கள் மூலமாக பேரம் பேசி வருவதாக காந்தி நகர் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து, அந்த கும்பலை சுற்றிவளைத்த போலீசார் குழந்தையை விற்க முயன்ற தாய் வெங்கடலட்சுமி, வாங்க முன்வந்த மாதவி, புரோக்கர்கள் கங்காதர் ரெட்டி மற்றும் ஸ்ரீதேவி ஆகிய நால்வரையும் கைது செய்தனர்.
வெங்கடலட்சுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, குடும்ப வறுமையை போக்கிக் கொள்ள அந்த பெண் குழந்தையை விற்க முனைந்ததாக தெரிவித்துள்ளார்.
தற்போது, அந்த குழந்தையை அரசு காப்பகத்தில் ஒப்படைத்துள்ள போலீசார், குற்றவாளிகள் நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.