பாகிஸ்தான் நடிகர் ஒருவர் கூட மகாராஷ்டிராவில் கால்வைக்க அனுமதிக்க முடியாது... மிரட்டும் சிவசேனா!
மும்பை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களைப் போல நடிகர்கள் ஒருவரைக் கூட மகாராஷ்டிரா மண்ணில் கால்வைக்க விடமாட்டோம் என்று சிவசேனா மிரட்டியுள்ளது.
மும்பையில் பாகிஸ்தானிய கஜல் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சிக்கு சிவசேனா எதிர்ப்புத் தெரிவித்தது. இதனால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இதன் பின்னர் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் கசூரி நூலை மும்பையில் வெளியிட ஏற்பாடு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரான சுதீந்திரா குல்கர்னி மீது சிவசேனா தொண்டர்கள் கருப்பு மை வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவருடனான பேச்சுவார்த்தை நடக்கவிருந்த நிலையில் சிவசேனா கட்சியினர் மும்பையில் உள்ள பி.சி.சி.ஐ.அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதனிடையே பாகிஸ்தான் நடிகர்கள் ஃபவாத் கான் மற்றும் மகிரா ஆகியோர் மகாராஷ்டிராவில் நடக்கும் விழா ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கும் சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து சிவசேனா கட்சியின் பொதுச் செயலாளர் அக்ஷய் பர்தாபுர்கர் கூறுகையில், பாகிஸ்தான் நடிகர்களுக்கு மகாராஷ்டிராவிற்குள் வர அனுமதி கிடையாது. அதனை எங்களால் ஏற்கமுடியாது; பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர்கள், கிரிக்கெட் வீரர்களை மகாராஷ்டிராவிற்குள் நுழையவே விடமாட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications