இந்தியா- பாக். போட்டியின் போது சூதாட்டம்... 9 புக்கிகள் கைது... பணம் பறிமுதல்!
ஜெய்ப்பூர்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு ஆந்திரா, ராஜஸ்தான் மாநிலங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1.25 லட்சம் ரூபாய் பணத்தையும் செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த 14ஆம் தேதிமுதல் தொடங்கி நடைபெற்று வருகின்றனர். நேற்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் மோதின. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தானை இந்தியா துவம்சம் செய்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் மீது சூதாட்டம் நடப்பதாக ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து சூதாட்டம் நடப்பதாக கூறப்பட்ட நிகல்கஞ்ச் பகுதிக்கு சென்ற போலீசார் சுற்றி வளைத்தனர்.
தரகர்கள் கைது
அப்போது இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக மனோல் ஜெயின், சந்திரேஷ் ஜெயின் ஆகிய இருவரும் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது பணம் வைத்து விளையாடியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த ரூ.50 ஆயிரம், செல்போன்கள், மின்னணு சாதனங்கள், சூதாட்டம் நடத்துவதற்கு பயன்படுத்திய காகிதங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன.
ஆந்திராவில் கைது
இதேபோல் ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள இந்துப்பூர் நகரில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.81 ஆயிரம் பணம் மற்றும் செல்போன்கள் கைப்பற்றப்பட்டது.
இந்த 2 மாநிலங்களிலும் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டதும், அவர்களிடம் இருந்து ரூ.1.25 லட்சம் கைப்பற்றப்பட்டதும், குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications