எந்த........ வேண்டுமானாலும் முதல்வராக வரலாம்: 'இந்தி' கெட்ட வார்த்தையில் கொந்தளித்த சின்ஹா
ராய்ப்பூர்: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா செய்தியாளர்கள் கூட்டத்தில் இந்தி கெட்ட வார்த்தையை பகிரங்கமாக பயன்படுத்தி பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹா அண்மைக்காலமாக ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசியலை குறி வைத்து செயல்பட்டு வருகிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்வாரிய அதிகாரியைக் கட்டிப்போட்டு உதைத்த வழக்கில் ஜாமீன் கேட்க மறுத்து சிறையிலேயே இருந்தார்.
பின்னர் அத்வானி நேரில் சந்தித்து கேட்டதைத் தொடர்ந்து ஜாமீன் வாங்கி வெளியே வந்தார். அப்போது, ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா முழு தகுதியானவர் என்று அத்வானி புகழாரம் சூட்டினார். இந்த உள்நோக்கத்துடனேயே ஜார்க்கண்ட் மாநில அரசியலில் சின்ஹா ஈடுபட்டு வருகிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில அரசியலிலும் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளார் யஷ்வந்த் சின்ஹா. அம்மாநில தலைநகர் ராய்ப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, நீங்கள் சத்தீஸ்கர் மாநில முதல்வராவீர்களா? என்று கேட்கப்பட்டது. அப்போது இந்தியில் ஒரு கெட்ட வார்த்தையை பயன்படுத்தி எந்த ஒரு ... வேண்டுமானாலும் முதல்வராகலாம் என்று கூறினார்.
இந்த பதிலைக் கேட்ட செய்தியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். யஷ்வந்த் சின்ஹாவின் இப்பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.