மீண்டும் வந்தார் எதியூரப்பா... கர்நாடக மாநில பாஜக தலைவராக நியமனம்
பெங்களூர்: முன்னாள் கர்நாடக முதல்வர் பி.எஸ். எதியூரப்பா அம்மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநில பாஜக தலைவராக முன்னாள் முதல்வர் பி.எஸ். எதியூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநில பாஜக தலைவர் பிரகலாத் ஜோஷியின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி துவங்கியது.
அடுத்த தலைவராக யாரை பாஜக மேலிடம் நியமிக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் எதியூரப்பாவின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையின் இந்த முடிவை கர்நாடக மாநிலத்தில் உள்ள அக்கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
எதியூரப்பா கட்சியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வார் என பாஜக தலைவர்கள் பலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 2008ம் ஆண்டு நடந்த தேர்தலில் கர்நாடகாவில் பாஜக அமோக வெற்றி பெற காரணமாக இருந்தவர் எதியூரப்பா. பின்னர் கட்சியில் ஏற்பட்ட பிரச்சனையால் அவர் அங்கிருந்து வெளியேறி கேஜேபி என்ற புதிய கட்சியை துவங்கினார்.
2014ம் ஆண்டு தனது கேஜேபி கட்சியை கலைத்துவிட்டு பாஜக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். சொந்த இடத்திற்கே திரும்பி வந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். கர்நாடகாவில் கட்சி பணியாற்ற விரும்புவதாக எதியூரப்பா பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிடம் கூறியுள்ளார்.