போலீஸ், அரசு வாகனங்களில் வாக்காளர்களுக்கு பணம், இலவசங்கள்: தேர்தல் ஆணையரிடம் டி.ஆர். பாலு புகார்

திமுக எம்.பி.யும், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர். பாலு தலைமை தேர்தல் ஆணையரை டெல்லியில் நேற்று நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
திமுகவின் பிரசாரத்தைத் தடுக்கும் நோக்கில் அதிமுக அமைச்சர்கள் காவல் நிலையங்களில் அமர்ந்து கொண்டு திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர்.
மேலும் பண நோட்டுக்கள் மற்றும் இலவசப் பொருட்களை ஆளும் கட்சி சார்பில் விநியோகம் செய்வதற்கு தமிழக காவல் துறை மற்றும் அரசு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் இந்தத் தொகுதியில் அரசு வாகனங்களை சோதனை செய்வதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையை நியமிக்க வேண்டும்.
மாவட்ட அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆளும் கட்சியினரின் ஆணையின் படி நடக்கிறார்கள். எனவே, நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறும் வகையில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வீடியோ பதிவுகள் நடைபெற வேண்டும்.
பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் துணை ராணுவ படையை நியமிக்க வேண்டும். ஏற்காடு தொகுதிக்குள் நுழையும் வழிகள் மற்றும் வெளியேறும் வழிகளில் மத்திய துணை ராணுவ படையினரால் சோதனைச் சாவடிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
சேலம் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் வேட்பாளரின் பிரதிநிதிகள் வாக்களிப்பு மையங்களை நேரடியாகக் கண்காணிக்கும் வகையில் இணையம் வழியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications