பெங்களூரில் மீண்டும் ஒரு மானபங்க சம்பவம்.. நடு ரோட்டில் பெண்ணின் நாக்கை கடித்த காமுகன்
பெங்களூர்: பெங்களூரில் மீண்டும் ஒரு பெண் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் நகர பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஷாப்பிங் மால் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை 6.30 மணியளவில், வேலைக்கு செல்வதற்காக அவர் பஸ் நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
எஸ்.பி.ஆர். லே அவுட் பகுதியில் அவர் நடந்து சென்றபோது அதுவரை அவர் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு வாலிபர் திடீரென, அந்த பெண்ணை கட்டிப்பிடித்து, உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார்.
நாக்கில் காயம்
மேலும், அவரது வாயை வலுக்கட்டாயமாக திறந்து நாக்கை கடிக்க தொடங்கியுள்ளார். இந்த போராட்டத்தில் அந்த பெண் தப்பிக்க முயன்றபோது, அவரின் நாக்கை இந்த காமுகன் கடித்துள்ளார். கைகள், கால்களிலும் அந்த நபரால் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
தப்பியோடிய காமுகன்
இருப்பினும் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அந்தப்பகுதியில் வசிப்பவர்கள் ஓடி வந்தார்கள். எனவே அந்த வாலிபர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அங்கு உள்ள ஒரு டீக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் இளம் பெண்ணை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து வரும் காட்சிகள் மட்டும் பதிவாகி இருந்தது. பாலியல் தொல்லை கொடுத்து, அவரை தாக்கிய சம்பவம் கேமராவின் ஃபோகசுக்கு வெளியே நடந்ததால் அது பதிவாகவில்லை.
தனிப்படை
நடந்த சம்பவம் பற்றி கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் பெண் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. காமுக நபரை பிடிக்க கே.ஆர்.புரம் உதவி போலீஸ் கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த நபர் ஸ்வெட்டர், குல்லா அணிந்திருந்ததால் அடையாளம் காணுவதில் சிறு சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது.
தொடரும் அவலம்
பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும், கம்மனஹள்ளியில் நடந்து சென்ற பெண் மீதும் மானபங்க சம்பவங்கள் நடந்தன. இந்த நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றவாளிகள் மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் கடும் நடவடிக்கைகளை காவல்துறை எடுக்க பெண் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.