சியாச்சின் பனிமலையில் சர்வதேச யோகா தினத்துக்கு தயாராகும் ராணுவ வீரர்கள்!
சியாச்சின்: சர்வதேச யோகா தினத்தையொட்டி உலகின் மிக உயரமான சியாச்சின் பனிப் பிரதேசம் மற்றும் போர்க் கப்பல்களில் உள்ள ராணுவ வீரர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
சர்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதுதான் முதலாவது சர்வதேச யோகா தினம் என்பதால், மத்திய அரசு பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து மக்களும் யோகாவில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஏற்பாடுகள் நடக்கின்றன.
சியாச்சினில்
இமயமலையில், கடல்மட்டத்திலிருந்து 12,000 அடி உயரத்தில் அமைந்துள்ள பனிபடர்ந்த சியாச்சின் ராணுவ முகாமில் 500 வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மோடி வெளியிட்ட படங்கள்
அனைத்து ராணுவ முகாம்களிலும் யோகா தினத்தைக் கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். ராணுவத்தினர் யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ள படங்களை பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
போர்க் கப்பல்களிலும்
இந்திய பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், மத்திய தரைக்கடல் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள இந்திய கடற்படைப் பிரிவுகளிலும், போர்க் கப்பல்களிலும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படவுள்ளது.
200 கோடி பேர்
இந்தியாவின் தலைமையில் 191 நாடுகள் இந்த யோகா தினத்தில் பங்கேற்க உள்ளன. உலகெங்கும் மொத்தம் 200 கோடிப் பேர் இந்த யோகா தினத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ராஜ்பாத்தில்
டெல்லி ராஜ்பாத்தில் நடக்கும் யோகா தின நிகழ்வில் ராணுவத்தினர், என்சிசி பிரிவினர், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 35000 பேர் பங்கேற்கின்றனர்.
ஐநாவில்
ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறவுள்ள 2 மணி நேர பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில், இந்தியப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஐ.நா.வின் சர்வதேசப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்.
சுஷ்மா ஸ்வராஜ்
இந்த நிகழ்ச்சிக்கு தலைமைத் தாங்க, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சனிக்கிழமை நியூயார்க் வருகிறார். இதில், ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் ஷாம்குட்டேசா, ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவி சங்கர் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.
டைம்ஸ் சதுக்கத்தில்
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் 30 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ளவுள்ள யோகா விழாவிலும் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கவுள்ளார். ஐ.நா சார்பில் அங்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சி, முன்னணி தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.