96 வயது யோகா குரு பி.கே.எஸ். ஐயங்கார் மரணம்
புனே: கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் யோகாசன குரு பி.கே.எஸ். ஐயங்கார் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 96.
சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஐயங்கார் கடந்த 3 வாரமாக புனே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது.
முதலில் அவர் மருத்துவமனைக்கு வர மறுத்து விட்டார். வீ்ட்டிலேயே இருந்தபடி அவரது குடும்ப டாக்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் பின்னர் உடல் நிலை மோசமடைந்ததும்தான் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அங்கும் கூட அவருக்கு தீவிர சிகிச்சை பெற மறுத்து விட்டார் ஐயங்கார். டாக்டர்கள் அவரிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட பின்னர்தான் தீவிர சிகிச்சைக்கு சம்மதித்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை ஐயங்காரின் உயிர் பிரிந்தது.
11வது பிள்ளையாக பிறந்தவர்
பி.கே.எஸ். ஐயங்கார், கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பேலூரில் பிறந்தவர். இவரது தந்தை கிருஷ்ணமாச்சாருக்கு 13 பிள்ளைகள். அதில் 11வது பிள்ளையாக பிறந்தவர் இவர். இவரது தந்தை இறந்ததும் குடும்பம் பெங்களூருக்கு இடம் பெயர்ந்தது.
சிறு வயதிலிருந்தே உடல் மெலிந்து அடிக்கடி நோய்வாய்ப்பட்டு வந்துள்ளர் ஐயங்கார். இதையடுத்து இவரது மைத்துனர் இவரை தனது மைசூர் இல்லத்துக்கு வரவழைத்து யோகா கற்றுக் கொடுத்தார். 15 வயதில் அப்படி ஆரம்பித்த யோகாதான் பின்னர் ஐயங்காரின் பேச்சு, மூச்சு, அடையாளமாக மாறிப் போனது.
சர்வதேச அளவில் மிகச் சிறந்த யோகா குருவாக மிளிர்ந்து வருபவர் ஐயங்கார். பல விருதுகளையும், அங்கீகாரங்களையும் அவர் பெற்றுள்ளார். இந்த ஆண்டு மத்திய அரசு ஐயங்காருக்கு பத்மவிபூஷன் விருதை அளித்துக் கெளரவித்தது.