யார் குறுக்கே வந்தாலும், விடமாட்டோம்.. மக்கள் குறைகளை உடனுக்குடன் தீர்க்கிறோம்..உ.பி. யோகி பெருமிதம்
லக்னோ: சுமார் 24 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களின் குறைகள் அரசின் கவனத்திற்கு வந்த உடனேயே தீர்த்து வைக்கப்படுகின்றன என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை யோகி ஆதித்யநாத் தினமும் தொடங்கி வைத்து வருகிறார். அதேபோல ஏற்கனவே தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் எந்த அளவுக்கு முடிவுற்றிருக்கிறது என்பது குறித்தும் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "மக்களின் குறைகள் எதுவாக இருந்தாலும் அது அரசின் கவனத்திற்கு கொண்டு வந்த உடன் உடனடியாக சரி செய்யப்படுகிறது" என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் பேசியதாவது, "இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் இருக்கிறது. இந்த மாநிலத்தில் சுமார் 24 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 762 மாநகராட்சிகள் உள்ளன. இவ்வாறு இருக்கையில் இவர்கள் அனைவருக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது எங்கள் அரசின் கடமையாகும். இதற்காக ஏற்கனவே ரூ.8,731 கோடி மதிப்பில் 2,029 வளர்ச்சி திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
தற்போது வரை 7 மாநகராட்சிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. 17 மாநகராட்சியை மேலும் சேர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முன்னர் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் மதிப்பு ரூ.8,731 கோடி. இது பெரிய தொகையாக இருந்தாலும், பாஜக அரசின் பல திட்டங்களில் இது ஒரு சிறிய எண்ணிக்கை மட்டுமே. இந்த தொகை ஒரு மாநிலங்களின் ஆண்டு பட்ஜெட்டை விட அதிகம். இவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டதற்கான காரணம் வளர்ச்சி மட்டும்தான். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மாநிலம் மாஃபியாக்களின் மாநிலமாக இருந்தது. மக்கள் அரசை கண்டு அஞ்சினார்கள்.

ஒருபுறம் மாஃபியா, மறுபுறம் எதற்கும் கவலையற்ற அரசு. இதுதான் உத்தரப் பிரதேசமாக இருந்தது. எனவே லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு சென்றனர். ஆனால் இந்நிலையை பாஜக அரசு மாற்றியிருக்கிறது. நான் வாரம் தோறும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறோம். அவர்களின் குறைகளை நாங்கள் கவனமாக கேட்டு அவற்றில் உள்ள பிரச்னையை திர்க்க முயன்று வருகிறோம். தற்போது வரை ஆயிரக்கணக்கான ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் கைப்பற்றப்பட்டு உரிய மக்களிடம் ஒப்படைக்கப்படைக்கப்பட்டுள்ளது. மக்களுடனான ஒத்துழைப்பு மற்றும் சிறப்பான சட்டம் ஒழுங்கு பராமரிப்புதான் இதற்கு முக்கியமான காரணம்.
தற்போது எங்களுக்கு இருக்கும் பெரிய இலக்கு உத்தரப் பிரதேசத்தை உலக தரத்திற்கு உயர்த்துவதுதான். இதை நோக்கிய பயணத்தில் யார் குறுக்கே வந்தாலும் நாங்கள் பொறுத்துக்கொண்டு இருக்க மாட்டோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications