பாஜகவின் திட்டங்கள் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.. யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: மத்திய மற்றும் மாநில பாஜக அரசு உத்தரப் பிரதேசத்தில் தொடங்கி வைக்கும், புதிய திட்டங்கள் மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை பாஜக மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகிறது. இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தது கிடையாது. யோகி ஆதித்யநாத் தான் தற்போது இந்த சாதனையை செய்திருக்கிறார். இந்நிலையில், இதனை கொண்டாடும் விதமாக பாஜக பல புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது.

ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு, அதைத் தொடர்ந்து நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகியவை உத்தரப் பிரதேச அரசு மீது கவனத்தை திருப்பியுள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு எதுவும் உ.பியில் நடக்கவில்லை. டெல்லி, மும்பை போன்ற நகரங்களில்தான் நடைபெற்றது. ஆனால் தற்போது முதல் முறையாக உ.பியில் இந்த மாநாடு நடைபெற்றிருப்பது அனைவரிடமும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களுக்கு யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டி வருகிறார். அதேபோல முடிவுற்ற பல திட்டங்களையும் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக கோரக்பூரில் ரூ.3838 கோடி மதிப்பில் 172 திட்டங்களை யோகி அறிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "உத்தரப் பிரதேச மக்கள் தலைவிதியை மட்டும் நம்பிக்கொண்டிருந்த காலம் இருந்தது. ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சாலைகள் போடப்பட்டால் இதுதான் தங்கள் தலைவிதியென நினைத்து அதனை மக்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் இன்று, ஒரே நாளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வரும் போது மக்களின் நம்பிக்கை வலுப்பெறும். அவர்கள் தங்கள் தலைவிதியை மட்டுமல்லாது தங்களது உழைப்பையும் நம்புவார்கள்.

புதிய நம்பிக்கை, புதிய வேலை வாய்ப்புகள்தான் உத்தரப் பிரதேச அரசின் குறிக்கோள் ஆகும். கோரக்பூரை பொறுத்த அளவில் இங்குள்ள விமான நிலையம் விரிவடைந்து வருகிறது. தற்போது 14க்கும் அதிகமான விமான நிலையங்கள் இயக்கப்பட இருக்கின்றன. எய்ம்ஸ், உரத் தொழிற்சாலை, நான்கு வழிச்சாலை, ஆறு வழிச்சாலையும் கோரக்பூரில் விரைவில் அமைய இருக்கின்றன" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications