ஊர் முழுக்க காவி பெயிண்ட் அடியுங்கள்.. உபி முதல்வர் உத்தரவு.. தொடரும் காவி காதல்!
உபி முழுக்க காவி நிறத்தில் பெயிண்ட் அடிக்கும்படி அம்மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
லக்னோ: காவி, உலகத்திலேயே இந்த நிறம் யாருக்கும் அதிகம் பிடிக்கும் என்று கேட்டால் குழந்தை கூட உபி முதல்வர் பெயரைத்தான் சொல்லும். எப்போதும் காவி உடையில் இருக்கும் யோகி ஆதித்யாநாத் மாநிலத்தையே காவி நிறத்தில் மாற்ற உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
இன்னும் அங்கு இருக்கும் தண்ணீர், வானம் மட்டுமே காவி நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்படவில்லை. அந்த அளவுக்கு காவி மீது காதலுடன் இருக்கிறார் உபி முதல்வர்.
இன்னும் எந்த இடங்களுக்கு எல்லாம் காவி நிறத்தில் பெயிண்ட் அடிக்க சொல்வார் என்று அதிகாரிகள் அங்கு குழம்பிப் போய் இருக்கிறார்கள்.
சட்டங்கள்
உபி முதல்வராக யோகி ஆதித்யாநாத் பொறுப்பேற்றதில் இருந்து நிறைய வினோத சட்டங்கள் அங்கு நிறைவேற்றப்படுகிறது. யோகி இருக்கும் தெருவில் செல்பி எடுக்க கூடாது, சில கிராமங்களில் சாலையில் பெண்கள் போன் பேச கூடாது என்று வித்தியாசமான சட்டங்கள் நிறைய வந்து இருக்கிறது. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பும் ஆதரவும் இருக்கிறது.
யோகி அலுவலகம்
அந்த வரிசையில் யோகியின் அலுவலகம் காவி நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டது. அங்கு இருக்கும் எல்லா சுவர்களும் காவியில் நிரப்பட்டது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு புள்ளி கூட வேறு நிறத்தில் வைக்கப்படவில்லை.
அரசு அலுவலகங்கள்
அதற்கு அடுத்தபடியாக அரசு அலுவலகங்கள் அனைத்தும் காவி நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டு இருக்கிறது. காவல் நிலையங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், பார்க்குகள் என எல்லாமே காவியில் நிரம்பி இருக்கிறது. இதற்காக தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
|
எல்லாமே
இந்த நிலையில் நேற்று இன்னொரு வேலையும் செய்து இருக்கிறார்கள். அங்கு இருக்கும் டிராபிக் தடுப்புகள், கம்பிகளிலும் காவி நிறம் அடித்து இருக்கிறார்கள். சில இடங்களில் மங்களகரமாக இருக்கட்டும் என்று மஞ்சள் நிறம் பயன்படுத்தி இருக்கிறார்கள்.