"நீங்கள் மோடிக்கு மட்டும்தான் சபாநாயகரா?": லோக்சபாவில் திரினமுல் எம்.பி ஆக்ரோஷ பேச்சு
டெல்லி: நீங்கள் மோடிக்கு மட்டும் சபாநாயகர் கிடையாது என்று லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனை பார்த்து கூறிய திரினமுல் காங்கிரஸ் எம்.பி., கடும் எதிர்ப்பு, காரணமாக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
ரயில்வே பட்ஜெட்டில் மேற்கு வங்கத்துக்கு அநியாயம் இழைக்கப்பட்டுவிட்டதாக கூறி, நாடாளுமன்றத்தில் திரினமுல் காங்கிரஸ் கட்சியினர் நேற்று அமளியில் ஈடுபட்டனர். அப்போது பாஜக எம்.பிக்களுக்கும், அவர்களுக்கும் லேசான கைகலப்பு ஏற்பட்டது.

இதை கண்டித்து இன்று லோக்சபாவில், திரினமுல் எம்.பிக்கள் பதாகைகளை ஏந்தியபடி அரசுக்கும், பாஜகவுக்கும் எதிராக கோஷமிட்டனர். இதை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கண்டித்தார். பதாகைகளை நாடாளுமன்றத்துக்குள் கொண்டுவரக்கூடாது என்று அறிவுறுத்தல் அளிக்கப்பட்டிருந்தும்கூட இதுபோல செய்தால் கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டிவரும் என்று சபாநாயகர் எச்சரித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த திரினமுல் எம்.பி. கல்யாண் பானர்ஜி, "நீங்கள் மோடிக்கு மட்டும் சபாநாயகர் கிடையாது" என கூறிவிட்டு மேலும் சில ஆட்சேபகரமான வார்த்தைகளை பயன்படுத்தினார்.
இதைக்கேட்டு ஆத்திரமடைந்த பாஜக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று எதிர் கோஷமிட்டனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. எதிர்ப்பு வலுத்ததையடுத்து தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார் கல்யான் பானர்ஜி.












Click it and Unblock the Notifications