சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை விதிக்கும் முடிவு நிறுத்தி வைப்பு: அமைச்சர் நட்டா
டெல்லி: சிகரெட்டுகளை சில்லறையாக விற்பனை செய்ய தடை விதிக்கும் முடிவை மத்திய அரசு நிறுத்தி வைக்க உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
சிகரெட்டுகளை சில்லறை முறையில் விற்பனை செய்ய தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து சிகரெட், புகையிலைப் பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு தீர்மானித்தது. இந்நிலையில் இது பற்றி கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த புகையிலை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தினார்.

சிகரெட் சில்லறை விற்பனை தடை செய்யப்பட்டால் தங்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்று விவசாயிகள் வெங்கையா நாயுடுவிடம் தெரிவித்தனர். விவசாயிகளின் கருத்தை கேட்ட பிறகு அவர் டெல்லியில் இது குறித்து அமைச்சர்கள், எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் சிகரெட்டுகளை சில்லறையாக விற்பனை செய்ய தடை விதிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கூறுகையில்,
சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை விதிக்கும் முடிவு பற்றி அனைத்து தரப்பினருடனும் கலந்தாலேசிக்கப்படும். அதுவரை சிகரெட்டுகளை சில்லறையாக விற்பனை செய்ய தடை விதிக்கும் முடிவு நிறுத்தி வைக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications