அப்பா பிசினஸைப் பார்க்க அமெரிக்கா சென்ற இந்தியர்.. திருட வந்த கொள்ளையனால் சுட்டுக் கொலை
அமிர்தசரஸ் : அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் தன்னுடைய தந்தையின் பிசினஸை கவனித்துக் கொள்வதற்காக சென்ற 21 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபின் அமிர்தசரசை சேர்ந்த அக்ஷய் பிரீத்சிங் என்ற அந்த இளைஞர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்ற நிலையில், தற்போது அவர் கொள்ளையன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அவர் தனது தந்தையின் கடையில் தனியாக இருந்தபோது, அங்குவந்த கொள்ளையன், அங்கு கொள்ளையடிக்க முயன்றுள்ளார். இதை அக்ஷய் கண்டித்ததால், அவரை அந்த கொள்ளையன் தனது துப்பாக்கியை கொண்டு சுட்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே அக்ஷய் பரிதாபமாக உயிரிழந்தார்.
கவனித்துக் கொள்ள சென்ற மகன்
மிசிசிப்பி மாகாணத்தில் அக்ஷய் பிரீத் சிங்கின் தந்தை பக்ஷிஷ் சிங்கிற்கு மூன்று கடைகள் இருந்தநிலையில், அவருடன் சேர்ந்து அந்தக் கடைகளை கவனிப்பதற்காக அக்ஷய், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்றுள்ளார்.
சுட்டுவீழ்த்திய கொள்ளைக்காரன்
தன்னுடைய தந்தையின் கடை ஒன்றில் கடந்த சனிக்கிழமை அக்ஷய் தனியாக இருந்தபோது, அங்குவந்த கொள்ளையன் ஒருவன் அங்கிருந்த பொருட்களை கொள்ளையடிக்க முயன்றுள்ளான். சிசிடிவி கேமரா மூலம் இதை கண்டுபிடித்த அக்ஷய், அந்த கொள்ளையனை தட்டிக் கேட்க, அவன் சரமாரியாக சுட்டு வீழ்த்தியுள்ளான்.
சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
இந்த சம்பவத்தில் அக்ஷயின் உடலில் மூன்று குண்டுகள் பாய்ந்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்குவந்த போலீசார் , கொள்ளையனை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
திருமணம் நடக்கவில்லை
அக்ஷயின் கொலை குறித்து தகவல் அறிந்த அவரது தாய், சகோதரர் உள்ளிட்ட உறவினர்கள் கதறி அழுதனர். அக்ஷக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. அவருக்கு வீட்டில் பெண் பார்த்து வந்தநிலையில், அவர் கொல்லப்பட்டது அவர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மகிழ்ச்சி தருணத்தில் சோக சம்பவம்
இந்தியாவில் அக்ஷயின் தாய் மற்றும் சகோதரர் வசித்துவரும் நிலையில், சகோதரர் லவ்பிரீத் சிங்கின் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் குடும்பமே மிகுந்த மகிழ்ச்சியுடன் ஈடுபட்டிருந்தது. அப்போது அக்ஷய் கொலை குறித்த செய்தி வந்ததால், குடும்பமே தற்போது நிலைத்தடுமாறியுள்ளது.