புனேவில் அரைகுறை ஆடையில் ஆண்களுடன் ஊர் சுற்றியதாகக் கூறி இளம்பெண் மீது தாக்குதல்
புனே: புனேவில் அரைகுறை ஆடை அணிந்து இரவு நேரத்தில் ஆண்களுடன் ஊர் சுற்றியதற்காக இளம்பெண் ஒருவரை சிலர் தாக்கியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த 22 வயது பெண் தனது தோழியின் திருமணத்தையொட்டி நடந்த சங்கீத நிகழ்ச்சி ஒத்திகையில் கலந்துவிட்டு கடந்த 1ம் தேதி காலை 5.30 மணிக்கு இரண்டு ஆண் நண்பர்களுடன் காரில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அவர்களின் காரை வழிமறித்த சிலர் அந்த பெண்ணை பார்த்து இப்படி அரைகுறை ஆடை அணிந்து கண்டநேரத்தில் ஆண்களுடன் ஊர் சுற்றுகிறாயே என்று கூறி திட்டியுள்ளனர். மேலும் அந்த பெண்ணை காரில் இருந்து கீழே இழுத்து தாக்கியுள்ளனர்.
இது குறித்து அந்த பெண் கூறுகையில்,
எங்கள் காருக்கு அருகில் வந்த ஒரு காரில் இருந்த நபர்களில் ஒருவர் என்னை பார்த்து திட்டினார். பின்னர் எங்கள் காரை வழிமறித்து என்னை தாக்கினர். இதை தடுக்க வந்த என் நண்பரையும் தாக்கினர். அங்கிருந்து சென்ற அவர்கள் சிறிது நேரத்தில் 10, 15 பேருடன் வந்து என்னை மிரட்டினர்.
அரைகுறை ஆடை அணிந்து ஆண்களுடன் ஊர் சுற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தனர். நான் போலீசாருக்கு போன் செய்தேன். அவர்கள் ஒரு மணிநேரம் கழித்து வந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்யுமாறு கூறி நான் காவல் நிலையத்திற்கு ஒரு வாரமாக நடையாய் நடந்தேன். அதன் பிறகே வழக்குப்பதிவு செய்தனர் என்றார்.












Click it and Unblock the Notifications