தலையில் முடியில்லை... உயரம் குறைவு... அழகான முகமில்லை...: விரக்தியில் இளைஞர் தற்கொலை
காசியாபாத்: அழகாக இல்லை என தொடர்ந்து நண்பர்கள் செய்து வந்த கிண்டலைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார் இளைஞார் ஒருவர்.
காசியாபாத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஜீவன் சர்கார். கால் சென்டர் ஊழியரான சர்கார் பணி நிமித்தமாக தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் சர்கார் தனது அண்ணனுக்கு நேற்று காலை எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார். அதில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார். தம்பி கூறியதைக் கேட்டுப் பதறிப்போன அவரது அண்ணன், மீண்டும் சர்காரைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால், தனது அழைப்பை சர்கார் எடுக்காததால், பயந்தி போய், தம்பியின் குடியிருப்புக்கு அருகாமையில் வசிக்கும் தனது நண்பரைத் தொடர்பு கொண்டு உடனடியாக சர்காரைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார்.
ஆனால், அவரது நண்பர் அங்கே சென்றபோது சர்காரின் உயிரற்ற உடலை மட்டுமே பார்க்க முடிந்துள்ளது. நண்பர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சர்காரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து சர்காரின் அறையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் இரண்டு கடிதங்கள் கிடைத்துள்ளது. அவற்றில் ஒன்று ஆங்கிலத்திலும், மற்றொன்று பெங்காலி மொழியிலும் எழுதப் பட்டிருந்திருக்கிறது.
அந்தக் கடைசி கடிதங்கள் மூலம் சர்கார் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. தனது தலையில் முடி இல்லை, முகம் சிறியதாக இல்லை என தனது நண்பர்கள் தொடர்ந்து கிண்டல் செய்ததாக அதில் சர்கார் எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அழகில்லாத தன்னால் இந்த உலகத்தில் வாழ இயலவில்லை எனவும், தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை எனவும் அக்கடிதத்தின் வாயிலாக தெரிவித்துள்ளாராம் சர்கார்.
சர்கார் ஏறக்குறைய ஆறு மாதங்களுக்கு முன்பே, பிப்ரவரி 2ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என சர்கார் முடிவு செய்து வைத்திருந்ததாக அவரது கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications