ம.பி.: உறவுக்கார சிறுமியை சீரழித்து, கர்ப்பமாக்கி, கருவையும் கலைத்த வாலிபர்
போபால்: மத்திய பிரதேசத்தில் 23 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தக்கார சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அவர் கர்ப்பமானதும் வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷிபு பிரஜபதி(23). அவரது தனது உறவுக்கார 16 வயது சிறுமியை கடந்த மார்ச் மாதம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து யாரிடமாவது கூறினால் அவ்வளவு தான் என்று அவர் சிறுமியை மிரட்டியுள்ளார். இதனால் சிறுமி நடந்த சம்பவம் பற்றி யாரிடமும் கூறவில்லை.
இந்நிலையில் சிறுமி கர்ப்பமானார். இருப்பினும் ஷிபு அவரை கண்டுகொள்ளவில்லை. இந்த சூழலில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அவர் தனக்கு வயிறு வலிப்பதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் தாயாரோ அவரை ஜைத்வாராவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு ஷிபுவிடம் தெரிவித்துள்ளார்.
ஷிபுவோ சிறுமியை கடந்த 9ம் தேதி சத்னா நகரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். வீட்டுக்கு வந்ததும் சிறுமி நடந்த விவரங்களை எல்லாம் தனது தாயிடம் தெரிவித்தார். உடனே அவர் இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷிபுவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.