மே.வங்காளத்தில் பயங்கரம்: ஓடும் ரயிலில் இருந்து வாலிபர் தூக்கி வீசிக் கொலை... 2 பேர் கைது
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் ஓடும் ரயிலில் இருந்து வாலிபரைத் தூக்கி வீசி கொலை செய்த குற்றவாளிகளைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்காள மாநிலத்தின் கிழக்கு ரயில்வேயின் சீல்டா பிரிவுக்கு உட்பட்டது டையமண்டு ஹார்பர் பகுதி. நேற்று அப்பகுதியைக் கடந்த உள்ளூர் ரயில் ஒன்றில் இருந்து வாலிபர் ஒருவர் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் உயிரிழந்த வாலிபரின் பெயர் கலு முல்லா என்றும் அவரது வயது 31 என்றும் தெரிய வந்தது.
இது குறித்து அரசு ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘உள்ளூர் பயணிகள் ரயில் ஒன்றில் பயணம் செய்த இருவர் கலு முல்லா (வயது 31) என்பவரை அடித்து தாக்கினர். அதன்பின்பு அவரை தூக்கி வெளியே வீசினர். இந்த சம்பவம் டையமண்டு ஹார்பர் பகுதி அருகே நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து கலி முல்லாவை ரயிலில் இருந்து தூக்கி வீசிக் கொலை செய்த குற்றவாளிகள் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது அவர்களிடம் கொலைக்கானக் காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.