போலீசார் அத்துமீறல்.. பெண் போலீசார் என் விரலை உடைக்க முயன்றனர்.. ஒய்.எஸ்.ஷர்மிளா பரபர குற்றச்சாட்டு!
ஹைதராபாத் : "பெண் என்றும் பாராமல் ஆண் போலீசார் என்னை தள்ளிவிட்டு அத்துமீறி நடந்துகொண்டனர். 2 பெண் போலீசார் என் விரலை உடைக்க முயற்சித்தனர். நான் என்னை தற்காத்துக் கொள்ளவே போலீசாரை தள்ளிவிட்டேன்." எனத் தெரிவித்துள்ளார் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா
ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சித்தலைவரும், ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா, தெலுங்கானா அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TSPSC) நடத்தவிருந்த போட்டித் தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு அலுவலகத்திற்குச் செல்ல முயன்றார்.

அப்போது அவரை போலீசார் தடுத்த நிலையில், ஒய்.எஸ்.ஷர்மிளா போலீசாரை தாக்கியதாக நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நேற்று நாம்பல்லி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் நேற்று மாலை ஷர்மிளா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய ஒய்.எஸ்.ஷர்மிளா, சந்திரசேகர ராவ் 9 வருடங்கள் முதல்வராக இருந்து என்ன பயன்? வீட்டிற்கு ஒருவருக்கு வேலை, மகளிருக்கு இட ஒதுக்கீடு, ஏழைகளுக்கு 2 படுக்கை அறை கொண்ட வீடு உள்ளிட்ட வாக்குறுதிகள் என்ன ஆனது? இதையெல்லாம் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால் அவர்களை அடக்கி சிறையில் அடைக்கும் வேலையைத்தான் அவர் செய்து வருகிறார்.
தெலுங்கானா அரசுப் பணியாளர் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து, அதனை விசாரிக்கும் சிறப்பு குழுவுக்கு மனு கொடுக்க நான் மட்டும் தனியாக சென்றேன். ஆனால், அதற்கு அனுமதிக்காததுடன், பெண் என்றும் பாராமல் ஆண் போலீசார் என்னை தள்ளிவிட்டு அத்துமீறி நடந்துகொண்டனர். 2 பெண் போலீஸார் என் விரலை உடைக்க முயற்சித்தனர்.

நான் என்னைப் பாதுகாத்து கொள்ளவே போலீசாரை தள்ளிவிட்டேன். ஆனால் நான் அவர்களை அடித்தது போல் சமூக வலைதளங்களில் போலீசாரே சில போலி வீடியோக்களை வெளியிட்டு, என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர்" எனக் குற்றம்சாட்டியுள்ளார். பெண் போலீஸ் ஒருவரின் கன்னத்தில் அறைவது போல வீடியோ வெளியான நிலையில், போலீசார் போலி வீடியோவை வெளியிட்டதாக ஷர்மிளா குற்றம்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications