தாசில்தார் அலுவலகத்தில் வைத்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் வெட்டிக் கொலை!
அனந்தபுரம், ஆந்திரா: ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தாசில்தார் அலுவலகத்தில் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் ராய்தாடு பகுதியைச் சேர்ந்தவர் சிவபிரசாத் ரெட்டி. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பிரமுகரான இவர் ராய்தாடு மண்டல தலைவராகவும் உள்ளார்.
இவர் தங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு வெட்டுவது தொடர்பாக தாசில்தார் மற்றும் வருவாய் அதிகாரியை சந்திக்க நேற்று ராய்தாடு தாசில்தார் அலுவலகம் வந்தார். வருவாய் அதிகாரி அழைத்ததன் பேரில் சிவபிரசாத் ரெட்டி நேற்று மதியம் 12.30 மணி அளவில் அங்கு வந்தார். அவருடன் அவரது ஆதரவாளர் சிவயாதவும் வந்து இருந்தார்.
வருவாய் அதிகாரி அறையில் வந்து அமர்ந்த அடுத்த நொடியில் மறைந்து இருந்த 8 பேர் கும்பல் அறைக்குள் புகுந்து சிவயாதவை கம்ப்யூட்டர் அறைக்குள் தள்ளி பூட்டினர். பின்னர் வீச்சரிவாளால் சிவபிரசாத் ரெட்டியை சரமாரியாக வெட்டினர். கழுத்தை குறிவைத்தே அவர்கள் தாக்கினார்கள். இதில் அவரது கழுத்து தொங்கியது. கை துண்டானது. அதே இடத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.
தாசில்தார் அலுவலக வளாகத்திலேயே போலீஸ் நிலையம் உள்ளது. ஊழியர்கள் அனைவரும் பணியில் இருந்தனர். அவர்கள் கண் முன்னாலேயே கொலை நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை நடந்த இடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகேந்திர பிரசாத் பெயர் பேட்ஜ் கிடந்தது. எனவே அவரது தலைமையில் கொலை நடந்து இருப்பதாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
இந்த கொலைக்கு சிவில் சப்ளை அமைச்சர் பரிதாலா சுனிதா, அவரது மகன் ஸ்ரீராம் தான் காரணம் என்றும் அவர்களது தூண்டுதலில் இன்ஸ்பெக்டர் நாகேந்திரபிரசாத் கொலையை அரங்கேற்றி உள்ளார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
பிரேத பரிசோதனை முடிந்ததும் சிவபிரசாத் ரெட்டி உடலை ஊர்வலமாக எடுத்து வந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு பிணத்துடன் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
24 மணி நேரத்தில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என எஸ்.பி. ராஜசேகர் உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்