ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் சகோதரர் கத்தியால் குத்திக் கொலை… ஆந்திராவில் பரபரப்பு
கடப்பா: ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ் .ராஜசேகர ரெட்டியின் சகோதரரும், முன்னாள் அமைச்சருமான விவேகானந்தா ரெட்டியை மர்ம நபர்கள் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கழிவறையில் இருந்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விவேகானந்தா ரெட்டியின் உதவியாளர் கிருஷ்ணா ரெட்டி, அதிகாலையில் விவேகானந்தா ரெட்டிக்கு தொலைபேசியில் அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது, எந்த ஒரு பதிலும் இல்லாததால், காலை 5.30 மணிக்கு விவேகானந்தா ரெட்டி வீட்டிற்கு வந்த கிருஷ்ணா ரெட்டி, வீட்டில் உள்ள அறைகளில் சென்று தேடி உள்ளார். பின்னர்,கழிவறைக்கு சென்று பார்த்தபோது, முன்னந்தலையில் காயத்துடன் உயிர் அற்ற நிலையில் விவேகானந்தா ரெட்டி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புலிவெண்டலு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று இரவு தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசி விட்டு தாமதமாக இரவு வீடு திரும்பிய அவரை, மர்மநபர்கள் யாராவது கொன்றுவிட்டு கழிவறையில் தூக்கி வீசினார்களா அல்லது வேறு ஏதும் காரணமா என்று போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பிரேத பரிசோதனையில் விவேகானந்தா ரெட்டியின் உடலில் ஏழு இடங்களில் கத்திக்குத்து இருந்தது தெரியவந்துள்ளது.
விவேகானந்தா ரெட்டி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை, சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
68 வயதான விவேகானந்தா ரெட்டி, மாநில அமைச்சராகவும் , மூன்று முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications