கண்கள் நீயே.. காற்றும் நீயே.. கைக்குழந்தையுடன் உணவு டெலிவரி செய்யும் குஜராத் பெண்.. வைரல் வீடியோ
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்த பெண் ஒருவருக்கு திருமணத்துக்குப் பின் வேலை எதுவும் கிடைக்காத நிலையில், தனது கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
மக்களிடம் சமீபகாலமாக ஹோட்டல் உணவுகளை சாப்பிடும் பழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், ஸ்விக்கி, ஜொமேட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிறுவனங்கள் வேலை இல்லாதவர்களுக்கு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

எந்த வேலையும் கிடைக்கவில்லை என்று விரக்தி அடைந்த இளைஞர்களுக்கும் சரி, கல்லூரிப் படிப்பை படித்துக் கொண்டே பார்ட் டைமாக வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் மாணவர்களுக்கும் சரி உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் சிறந்த தேர்வாக உள்ளது. இருசக்கர வாகனத்தில் வெயில், மழை என சுற்றும் இவர்களுக்கு சற்று கட்டுபடியாகும் சம்பளம் வழங்கப்படுவதால் வேலை தேடிக் கொண்டே இந்த வேலையைச் செய்யலாம் என்று பலரும் உணவு டெலிவரி செய்யும் வேலையில் இறங்கியுள்ளனர்.
தற்போது இந்த வேலைக்கு பெண்கள் பலரும் வருகை புரியத் தொடங்கியுள்ளனர். திருமணம், குழந்தை போன்ற சில கமிட்மெண்ட்டுகள் காரணமாக பெண்கள் சிலர் வேலையை விட்டுவிட்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்துகின்றனர். குழந்தை வளர்ந்த பிறகு வேலைக்கு வரும் பெண்களுக்கு அனுபவம் குறைவு, படிப்புக்கும், வேலைக்கும் உள்ள கேப் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி வேலையை மறுக்கும் சூழல் உள்ளது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்த பெண் ஒருவர் வேலை கிடைக்காத நிலையில், தனது கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம், ராஜ்கோட்டைச் சேர்ந்தவர் இளம்பெண். இவர் தற்போது உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த பெண் தன்னுடைய குழந்தையுடன் ஹீரோ இருசக்கர வாகனத்தில் சென்று உணவை டெலிவரி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் கைக்குழந்தையுடன் உணவு டெலிவரி செய்யும் பெண் பேசுகையில், உணவு டெலிவரி செய்யும் வேலையை கடந்த ஒரு மாதமாக செய்து வருகிறேன். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்துள்ளேன். ஆனால், திருமணமான பிறகு எனக்கு எந்தவொரு வேலையும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் வேலை கேட்டு ஏறி இறங்கினேன்
குழந்தை இருப்பதை காரணமாகக் கூறி வேலை கொடுக்க மறுத்து வந்தனர். அதன் பிறகு தான் குழந்தையுடன் செல்லும் வேலைக்கு இந்த வேலையை செய்து வருகிறேன். நான் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்திருக்கிறேன். ஆனாலும் திருமணத்திற்கு பிறகு எந்த வேலையும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு இடத்திலும் வேலை கேட்டுச்சென்றால் குழந்தை இருப்பதை காரணம் காட்டி வேலை கொடுக்க மறுத்தனர்.
அதன் பிறகுதான் குழந்தையை ஏன் வேலை செய்யும் இடத்திற்கு அழைத்துச் செல்லக் கூடாது என்று நினைத்தேன். என்னிடம் ஒரு இருசக்கர வாகனமும் இருந்தது. அதனால், கடந்த ஒரு மாதமாக என் குழந்தையை பைக்கின் முன்பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு தற்போது உணவு டெலிவரி செய்து வருகிறேன்.
வாழ்க்கையை நடத்துவதற்கு ஏதாவதொரு வேலை அவசியம் என்பதால் இந்த வேலையை செய்து வருகிறேன். ஆரம்பித்த புதிதில் மிகவும் கடினமாகத்தான் தோன்றியது. ஆனால், இப்போது பழகிவிட்டது. எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை 9 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். பலரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications