நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி கார்டடூன் போட்ட பிரெஞ்சு நாளிதழ் அலுவலகம் மீது தாக்குதல்.. 12 பேர் பலி
பாரீஸ்: பிரான்ஸின், பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ வார இதழ் அலுவலகத்திற்குள் புகுந்த 2 பேர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
பிரான்ஸைச் சேர்ந்த வார இதழ் சார்லி ஹெப்டோ. அதன் பாரீஸ் அலுவலகத்திற்குள் இன்று இரண்டு ஆண்கள் நுழைந்து திடீர் என கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய இருவரும் அங்கிருந்து ஓடிவிட்டதாக அவர்களை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஏதாவது சர்ச்சைக்கிடமான செய்தியை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வது சார்லி ஹெப்டோவுக்கு வழக்கமாகிவிட்டது. குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான கார்ட்டூன்களே அதில் அதிகம் வரும்.
அண்மையில் அந்த வார இதழ் உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி பற்றி கார்டூன் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தான் இன்று சார்லி ஹெப்டோ அலுவலகத்தில் கொடூரத் தாக்குதல் நடந்துள்ளது.

இந்தத் தாக்குதலில் நாளிதழின் எடிட்டர் உயிரிழந்துள்ளார். அதேபோல நான்கு கார்ட்டூனிஸ்ட்டுகளும் கொல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் கார்ட்டூனிஸ்ட்டுகளை இவர்கள் குறி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. கார்ட்டூனிஸ்டுகள் இருக்கும் பகுதியை நன்கு அறிந்து கொண்டு திட்டமிட்டு உள்ளே நுழைந்துள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் கடந்த 2011ம் ஆண்டு டென்மார்க் பத்திரிக்கை ஒன்று நபிகள் நாயகத்தை கேலி செய்து வெளியிட்ட கார்டூனை இவர்கள் தங்கள் வார இதழில் வெளியிட்டனர். அந்த கார்டூன் வெளியிட்ட மறுநாளே அதைக் கண்டித்து பெட்ரோல் குண்டு வீசி அலுவலகம் தாக்கப்பட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications