ஐஎஸ் தீவிரவாதிகளை மிரட்டும் எய்ட்ஸ்... அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள தலைமை உத்தரவு
டமாஸ்கஸ்: உலகையே மிரட்டி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை எய்ட்ஸ் நோய் பயமுறுத்தத் தொடங்கியுள்ளது. இதனால், அனைத்து ஐஎஸ் தீவிரவாதிகளும் எய்ட்ஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈராக், சிரியா ஆகிய நாடுகளை தளமாக கொண்டு இயங்கி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம், உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அந்த தீவிரவாத இயக்கத்தில் ஆட்கள் சேர்ந்து வருகின்றனர். இதனால் வேகமாக பலம் பெற்று வரும் அந்த தீவிரவாத இயக்கத்தை ஒழிக்க உலக நாடுகள் போராடி வருகின்றன.
இதற்கிடையே தாங்கள் ஆக்கிரமிக்கும் பகுதிகளில் உள்ள பெண்களை பாலியல் அடிமைகளாக சந்தைகளில் விற்று வருகின்றனர் ஐஎஸ் தீவிரவாதிகள். தீவிரவாதிகளிடமிருந்து தப்ப நினைக்கும் பெண்களை அவர்கள் கொன்று விடுவதாக கூறப்படுகிறது. பெரும் முயற்சிகளுக்குப் பின் அங்கிருந்து தப்பி வந்த பெண்கள் தாங்கள் அங்கு பெரும் பாலியல் கொடுமைகளை அனுபவித்ததாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளை எய்ட்ஸ் நோய் அச்சப்பட வைத்திருக்கிறது.

மொரோக்கான் பெண்கள்...
மொரோக்கானை சேர்ந்த இரண்டு பெண்களிடம் பாலியல் உறவு வைத்துக் கொண்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எய்ட்ஸ் நோய் பரவி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர்களிடமிருந்து மேலும் பலருக்கும் அந்த நோய் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.

16 தீவிரவாதிகளுக்கு எய்ட்ஸ்...
இதுவரை 16க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இதனால், அனைத்து தீவிரவாதிகளும் உடனடியாக எய்ட்ஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத தலைமை உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

எய்ட்ஸ் பீதி...
இதனால், அனைத்து தீவிரவாதிகளும் எய்ட்ஸ் தாக்குதல் பயத்தில் உள்ளனர். சிறுபான்மையின பெண்கள் துன்புறத்தப்பட்டு, அவர்களிடம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பலர் பாலியல் வல்லுறவில் ஈடுபடுவதால், நோயின் பாதிப்பு அதிகரிக்கலாம் என்ற அச்சமும் தீவிரவாதிகள் மத்தியில் எழுந்துள்ளது.

தற்கொலைப் படைத் தாக்குதல்...
இது ஒருபுறம் இருக்க, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு பயன் படுத்தவும் தலைமை திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

துருக்கிக்கு தப்பினர்...
தீவிரவாதிகளுக்கு எய்ட்ஸ் நோயைப் பரப்பிய மொரோகன் பெண்கள் துருக்கிக்குத் தப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications