எல்லைப் பிரச்சனை! இந்தியா சீனா இடையே ஜூலை 17-ஆம் தேதி 16-வது சுற்று பேச்சுவார்த்தை!
சீனா: இந்தியா சீனா இடையேயான ராணுவ உயரதிகாரிகளின் 16-வது சுற்று பேச்சுவார்த்தை வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.
படைகளை வாபஸ் பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தை இதுவரை 15 முறை நடைபெற்றும் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

லடாக் எல்லை
கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா சீனா படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இருநாட்டு எல்லைகளிலும் வீரர்கள் குவிக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்தது. இந்த பதற்றத்தை தணிக்கவும் படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாகவும் பேச இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் இதுவரை 15 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ராணுவ வீரர்கள்
இதன் காரணமாக பாங்காங் ஏரியின் வடக்கு, தெற்கு கரைகள், கல்வான், கோக்ரா, ஆகிய பகுதிகளில் இருந்து இருநாட்டு படைகளும் வாபஸ் பெறப்பட்டன. இருப்பினும் இன்னும் சில இடங்களில் படைகள் வாபஸ் பெறப்படாததால் இது தொடர்பான பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காணும் வகையில் இந்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

எல்லைக் கோடு
தற்போதைய நிலவரப்படி இந்தியா சீனா எல்லைப் பகுதிகளில் தலா 50,000 முதல் 60,000 வரையிலான வீரர்கள் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே எல்லைக் கட்டுப்பாட்டு கோடு விவகாரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா மிக உறுதியுடன் இருந்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.

16-வது சுற்றில் முடிவு
பதற்றத்தை தணிக்கும் வகையில் படைகள் வாபஸ் பெறுவது தொடர்பாக இந்த முறை முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லைப் பிரச்சனையில் இந்தியாவும் சீனாவும் ராஜ தந்திரமான நடவடிக்கைகளை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications