6 மாதங்களுக்கு பிறகு.. ஒற்றை நபருக்கு கொரோனா.. ஒட்டுமொத்தமாக லாக்டவுன் போட்ட ஜெசிந்தா ஆர்டெர்ன்
வெல்லிங்டன்: சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு நியூசிலாந்து நாட்டில் ஒருவருக்கு டெல்டா கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு 3 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கி கொரோனா பாதிப்பு, இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. பல உலக நாடுகளும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.
அதிலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், உலக நாடுகள் மத்தியில் அலை அலையாக வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இது தான் மிகப் பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது.

கொரோனா பாதிப்பு
இருந்தாலும்கூட தீவிர கட்டுப்பாடுகள், வேக்சின் பணிகள் ஆகியவை மூலம் சில நாடுகள் கொரோனா பாதிப்பை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளன. அதில் முதன்மையானது நியூசிலாந்து. ஆஸ்திரேலியாவுக்கு மேலே அமைந்துள்ள இந்த குட்டி நாடு வைரஸ் பரவலைத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்து வருகிறது. அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் எடுத்த முக்கிய நடவடிக்கைகள் காரணமாக அங்கு வைரஸ் பரவல் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே அங்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை, இதனால் அங்கு ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டது.

3 நாட்கள் ஊரடங்கு
பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், மக்கள் கிட்டதட்ட தங்களின் வழக்கமான பணிகளைத் தொடங்கியிருந்தனர். இந்தச் சூழலில் சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு இப்போது அங்கு ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, அதிவேகமாகப் பரவும் டெல்டா கொரோனாவால் அந்த நபர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நியூசிலாந்து அரசு 3 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது.

பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்
இது குறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில், "ஆறு மாதங்களாக இங்கு வைரஸ் பாதிப்பு இல்லை. இருப்பினும், டெல்டா கொரோனாவுக்கு எதிராக நாங்கள் அலட்சியமாக இருக்க மாட்டோம். டெல்டா கொரோனா பரவுவதைத் தடுக்க இது தான் எங்களுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பாகக் கூட இருக்கலாம். அண்டை நாடான ஆஸ்திரேலியா இதற்கு மிகச் சிறந்த உதாரணம். அவர்கள் டெல்டா கொரோனாவை கட்டுப்படுத்த இப்போது எந்தளவு சிரமப்படுகிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம். அதே நிலை நியூசிலாந்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத் தான் மீண்டும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளோம்" என்றார்.

வேக்சின் பணிகள்
இன்று இரவு தொடங்கி மூன்று நாட்களுக்கு மட்டும் ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிகச் சிறப்பான ஊரடங்கு கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்திய நாடுகளில் ஒன்று நியூசிலாந்து ஆகும். இருந்தாலும் கூட வேக்சின் பணிகள் அங்கு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து நாட்டிலுள்ள 20% பேருக்கு மட்டுமே வேக்சின் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அங்கு மீண்டும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications