காபூல் விமான நிலையத்திற்கு வெளியே தாலிபன் தாக்குதல்- 2 கேரள ஊழியர்கள் உட்பட 5 பேர் பலி
காபூல்: ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே தலிபான் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு கேரள ஊழியர்கள் உட்பட ஐந்து பாதுகாவலர்கள் பலியாகியுள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக் கோட்டையைச் சேர்ந்த பொன்னப்பன் (52) மற்றும் ரவீந்திரன் (54) என்ற இரண்டு பேரும் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு அமெரிக்க நிறுவனத்தில், பாதுகாவலர்களாக பணியாற்றி வந்தனர்.
நேற்று பொன்னப்பனும், ரவீந்திரனும் தாங்கள் தங்கியிருந்த குடியிருப்பில் இருந்து தங்கள் அலுவலகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது காபூல் விமான நிலையத்திற்கு வெளியே சுற்றுச் சுவர் பகுதியில், தலிபான் தீவிரவாதிகள் மோட்டார் பைக் வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். இதில் இந்த இருவர் உள்பட 5 பாதுகாவலர்கள் சிக்கி உயிரிழந்தனர்.
இந்தத் தகவல் அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் கேரளாவில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் ஆப்கானிஸ்தானில் உயிரிழந்த தகவல் கேட்டு கேரள மக்கள் சோகத்தில் மூழ்கினர்.
மேலும் பலியான 2 பேரின் உடல்களையும், சொந்த ஊருக்கு அனுப்ப அனைத்து ஏற்பாடுகளையும் தூத்தரக அதிகாரிகள் செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடந்த பகுதியை ஆப்கானிஸ்தான் ராணுவமும், வெளிநாட்டுப் படையினரும் கூட்டாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications