ஏப்ரல் 25ம் தேதியில் இருந்து இதுவரை 202 முறை அதிர்ந்த நேபாளம்: அச்சத்தின் உச்சத்தில் மக்கள்
காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த மாதம் 25ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருந்து இதுவரை 202 முறை ஆப்டர்ஷாக் எனப்படும் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த மாதம் 25ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியிருந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எவரெஸ்ட் சிகரம் அருகே உள்ள இடத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி இருந்தது.

நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு 6.2 என்ற அளவுக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு இன்று காலை 10.33 மணி வரை 36 முறை ஆப்டர்ஷாக் எனப்படும் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய நிலநடுக்கத்தில் 65 பேர் பலியாகியுள்ளனர், சுமார் 2 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர் என்று நேபாள உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொலாஹா மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக 36 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த மாதம் நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருந்து இதுவரை 202 முறை ஆப்டர்ஷாக் எனப்படும் நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. அவை ரிக்டர் அளவுகோலில் 4க்கு அதிகமாக பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications