ஹிலாரி கிளிண்டனின் 22 இமெயில்களை வெளியிட முடியாது: அமெரிக்க அரசு திட்டவட்டம் !
வாஷிங்டன்: தனியார் இணையதள சர்வரை பயன்படுத்தியது தொடர்பான விவகாரத்தில, ஹிலாரி கிளிண்டனின் 22 இமெயில்களை வெளியிட முடியாது என அமெரிக்க அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் ஒபாமாவின் முதல் பதவிக் காலத்தில் (2009-2013) வெளியுறவு அமைச்சர் பதவி வகித்தவர், முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் (வயது 68). இவர் தனது பதவிக் காலத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இமெயில்களை தனியார் இணையதள சர்வரை பயன்படுத்தி எழுதி உள்ளார்.

அமைச்சர் பதவி வகித்துக்கொண்டு, அரசு அலுவல்களுக்கு தனியார் இணையதள சர்வரை அவர் பயன்படுத்தியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது மரபை மீறிய செயலாகவும் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வாஷிங்டன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹிலாரியின் இமெயில்களை மாதம்தோறும் வெளியிட உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஹிலாரியின் 22 இமெயில்களை வெளியிட முடியாது என அமெரிக்க அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பை, வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஹிலாரியின் 22 இமெயில்களை வெளியிட முடியாது. அவை 37 பக்கங்களை கொண்டவை. அவற்றில் மிக முக்கிய ரகசியங்கள் அடங்கி இருக்கின்றன. ஆனால் அந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டபோது, அவை ரகசியம் என குறிப்பிடப்படவில்லை. பின்னர் ரகசியம் என ஆக்கப்பட்டுள்ளன என கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "அதிமுக்கிய ரகசிய இமெயில்களின் ஒரு பகுதியைக்கூட வெளியிட முடியாது" என குறிப்பிட்டார்
வரும் நவம்பர் மாதம் அங்கு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட தீவிரமாக உள்ள ஹிலாரிக்கு இந்த இமெயில் விவகாரம் பெரும் பிரச்சினையாக உள்ளது.












Click it and Unblock the Notifications