கணினி 'புரோகிராம்' எழுத தெரியவில்லை..25 இந்திய மாணவர்களை வெளியேற்ற அமெரிக்க பல்கலை உத்தரவு
நியூயார்க்: அமெரிக்காவின் கென்டகி பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்கள் 25 பேருக்கு பாடம் குறித்த போதிய அறிவு இல்லாததால் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் நிறுவனங்கள் மூலம் கென்டகி பல்கலைக்கழகத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்பல்கலைக்கழகத்தில் கணினி பிரிவில் சேர்ந்த 60 இந்திய மாணவர்களில், 40 பேருக்கு பாடம் குறித்து போதிய அறிவு இல்லை என அத்துறையின் தலைவர் ஜேம்ஸ் கேரி கூறினார்.

அவர்களுக்கு தேவையான கூடுதல் பயிற்சிகள் அளிக்கப்பட்ட பின்னரும், அவர்களில் 25 பேருக்கு கணினி குறித்த 'புரோகிராம்' எழுதவே தெரியவில்லை. அமெரிக்க இளநிலை பட்டதாரிகளுக்கான கல்வித் திட்டத்தில் சேர இது அடிப்படை விதிமுறையாகும். எனவே இவர்கள் இங்கிருந்து கணினி புரோகிராம்களை எழுத முடியாமல் சென்றால் எனது துறைக்கு அது களங்கத்தை விளைவிப்பதாக அமையும் என்றார் ஜேம்ஸ் கேரி.
இதையடுத்து அவர்கள் 25 பேரையும் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றுவது என நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இனி வரும் காலங்களில் பல்கலைக் கழகமே தங்களது கணினித் துறை உறுப்பினர்களை இந்தியாவிற்கு அனுப்பி மாணவர்கள் சேர்க்கை முயற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாக வெஸ்டர்ன் கென்டகி பல்கலைக் கழக நிர்வாகம் கூறியுள்ளது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் பிரிவுத் தலைவர் ஆதித்யா சர்மா, இது மிகவும் துரதிர்ஷ்டமானது. நிறைய பணம் செலவழித்து அமெரிக்காவுக்கு படிக்க வரும் இந்திய மாணவர்களில் சிலர் படிப்பை 'வெகு எளிதாக' எடுத்துக் கொள்கின்றனர் என்றார் சர்மா.
பல்கலைக் கழக நடவடிக்கையால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ள மாணவர்களில் சிலர் வேறு படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ளனர். அப்படி இடம் கிடைக்காதபட்சத்தில் அவர்கள் இந்தியாவுக்கு திரும்ப வேண்டியிருக்கும்.












Click it and Unblock the Notifications