நேபாளத்தில் ஷாக்! ஆற்றில் கவிழ்ந்த பயணிகள் பேருந்து.. உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 27ஆக உயர்வு
காத்மாண்டு: நேபாளத்தில் இந்திய பயணிகள் பேருந்து ஒன்று நேற்று ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில், மார்ஸ்யாங்டி ஆற்றில் பேருந்து கவிழ்ந்துள்ளது. இது குறித்த தனாஹுன் மாவட்டத்தின் டிஎஸ்பி தீப்குமார் ராயா கூறுகையில், “உத்தரப் பிரதேச மாநிலத்தின் பதிவெண் கொண்ட பேருந்து, ஐனா பஹாரா ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியிருக்கிறது. இதில் 40 பேர் பயணித்ததாக தெரிய வந்திருக்கிறது.

இதுவரை 27 பேரின் சடலங்களை மீட்டிருக்கிறோம். 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருக்கின்றனர். மீட்கப்பட்டவர்கள் விமானம் மூலம் காத்மாண்டு அனுப்பப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் 10 நாட்கள் சுற்றுப்பயணமாக நேபாளம் வந்திருக்கின்றனர்.
நேபாள பேரிடர் மேலாண்மை பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்த, ஆயுதப்படை மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) மாதவ் பாடேல் தலைமையிலான, 45 போலீஸார் கொண்ட குழு, விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் மகாராஷ்டிரா மாநிலம் பாக்மதி மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது. அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications