தாய்லாந்து: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 29 பேர் பலி
பாங்காக்: தாய்லாந்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 29 பேர் பலியாகியுள்ளனர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தில் வியாழக்கிழமை இரவு பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் வடக்குப்புற மாகாணமான சியாங் ரைக்கு சென்று கொண்டிருந்தது. லோம் சக் மாவட்டத்தில் பெட்சபுன் பகுதியின் அருகே வந்து கொண்டிருந்தபோது 30 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் அந்தப் பேருந்து தலை குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் சிதைந்து விட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 29 பேர் பலியாகினர். நான்கு பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து பெட்சபுன் மாகாணத்தின் காவல்துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் சுஹிட் சமனா கூறுகையில், விபத்தினைக் கண்ணால் பார்த்தவர் வேகமாகச் சென்றுகொண்டிருந்த பேருந்து பள்ளத்தினுள் பாய்ந்தது என்று தகவல் தெரிவித்ததாகக் கூறினார்.
டிரைவர் தூங்கிவிட்டதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற கருத்தினை அவர் தெரிவித்தார். பள்ளத்தாக்கிலிருந்து 28 உடல்களைக் கண்டெடுத்ததாகக் கூறிய அவர் பின்னர் மருத்துவமனையில் ஒருவர் இறந்துவிட்டார் என்றும் குறிப்பிட்டார். புத்தாண்டு விடுமுறையை ஒட்டி அதிகம் பேர் பயணிக்கும் இந்த இந்தப் பேருந்து விபத்து நடைபெற்றுள்ளது.
கடந்த அக்டோபரிலும் வயது முதிர்ந்த புத்த பக்தர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று அந்நாட்டின் வடகிழக்கே உள்ள ஒரு பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் 20 பேர் பலியாகினர்.












Click it and Unblock the Notifications