இந்தோனேசியா: தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. குழந்தைகள் உட்பட 30 பேர் உடல்கருகி பலி!
இந்தோனேசியாவின் பிஞ்சாய் நகரில் இயங்கி வரும் தீப்பெட்டி தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம்போல் தொழிற்சாலைக்கு பணியாளர்கள் வேலைக்கு சென்றனர்.
அப்போது திடீரென தீப்பெட்டி தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. என்ன நடக்கிறது என யோசிப்பதற்குள் தீப்பெட்டி தொழிற்சாலை முழுவதும் மளமளவென தீப்பற்றியது.

அலறிய தொழிலாளர்கள்
தீப்பெட்டி தயாரிப்பதற்கான மருந்தில் தீப்பற்றியதால் தீ அசுர வேகத்தில் பரவியது. இதனால் செய்வதறியாது திணறிய தொழிலாளர்கள் அங்கும் இங்கும் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

போராடிய தீயணைப்புத்துறை
ஆனாலும் தீயின் வேகத்திற்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் தீயில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்க போராடினர்.

சிறுவர்கள் உட்பட 30 பேர் பலி
இருப்பினும் தீயின் கோர நாக்குகளுக்கு 30 பேர் இரையாயினர். அவர்களில் 3 சிறுவர்களும் உடல்கருகி உயிரிழந்திருந்தது சோகத்தின் உச்சம்.

கரிக்கட்டையான உடல்கள்
உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கரிக்கட்டையாக காட்சியளித்தது. வேலைக்கு வந்தவர்கள் தங்களின் குழந்தைகளையும் உடன் அழைத்து வந்ததே மூன்று சிறுவர்கள் உயிரிழப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

இதற்கு முன் நிகழ்ந்த தீ விபத்துகள்
ஜகார்த்தாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட வெடித் தொழற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர். சுலேவேசி தீவில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலியாயினர், 2009ஆம் ஆண்டு சுமத்ரா தீவில் ஏற்பட்ட தீவிபத்தில் 20 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications